சிதம்பரம் ஆயிரங்கால் மண்டபத்தில் திருமண விவகாரம்: தீட்சிதர்களிடம் போலீசார் விசாரணை
ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது தொடர்பாக தீட்சிதர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் கடந்த 11ஆம் தேதி சிவகாசியைச் சேர்ந்த பட்டாசு ஆலை அதிபர் ஒருவரது வீட்டு திருமண விழா வெகு ஆடம்பரமாய் நடந்தேறியதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். தனியார் திருமணத்திற்காக தங்கக் கோபுரம் மீதேற அனுமதியளித்தது யார் என இந்து ஆலய பாதுகாப்பு குழுவினர் கேள்வி எழுப்பினர்.
திருமணத்திற்கு வந்தவர்கள் ஆயிரங்கால் மண்டபம் வரை காலணி அணிந்து வந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு சிதம்பரம் கோயில் தீட்ஷிதர் முறையாக விளக்கம் அளிக்கவேண்டும் என்றும் ஆன்மீகவாதிகள் வலியுறுத்தினர். இதற்கு பதில் அளித்த தீட்ஷிதர், எந்த உள்நோக்கமும் இல்லை என விளக்கம் அளித்தார். இதற்கிடையே பட்டு தீட்ஷிதர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது தொடர்பாக இன்று போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர் தீட்சிதர்கள் 7 பேரும் மீண்டும் 23ம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், கோபிநாத் கணேசன் என்பவர் சிதம்பரம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சிதம்பரம் காவல்துறையினர் இன்று பட்டு , பாஸ்கர், பாலகணேசன் உள்ளிட்ட ஏழு தீட்சிதர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இது குறித்து திருமண வீட்டாரிடமும் விசரணை நடத்த வேண்டும் என்றும் திருமண வீட்டார் தொடர்பானவர்கள் வரும் 23 ஆம் தேதி காவல்நிலையத்திற்கு வரவேண்டும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.