5ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை - 47 வயது ஆசிரியரிடம் போலீசார் விசாரணை

5ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை - 47 வயது ஆசிரியரிடம் போலீசார் விசாரணை
5ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை - 47 வயது ஆசிரியரிடம் போலீசார் விசாரணை

ஆத்தூர் அருகே அரசு தொடக்கப்பள்ளியில் படிக்கும் 5 ஆம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக ஆசிரியர் மீது சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன்பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே மண்மலை பாலக்காடு அடுத்துள்ள சித்தன்பட்டி குட்டை கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர், இங்கு ஒரு பெண் தலைமை ஆசிரியர் உள்பட இரண்டு ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கோடை விடுமுறை முடிந்த நிலையில் கடந்த 20ஆம் தேதி பள்ளி திறக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்ற 5 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுமி நான் இனி பள்ளிக்கு செல்லமாட்டேன் என பெற்றோரிடம் அழுதவாறு கூறியுள்ளார்.

என்ன காரணம் என தனது மகளிடம் அவர்கள் விசாரித்தபோது செந்தாரப்பட்டியைச் சேர்ந்த அகஸ்டின் தங்கையா ( 47) என்கிற பள்ளி ஆசிரியர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக கூறியுள்ளார். மேலும் தன்னுடன் படிக்கும் சக மாணவர்களை கை, கால்களை அழுத்த சொல்லி அவர்களிடமும் ஆசிரியர் அத்துமீறி நடந்து வருவதோடு, நேற்றைய தினம் தன்னை பார்க்க பள்ளிக்கு வந்த உறவுக்கார 13 வயது சிறுமியிடமும் சில்மிஷத்தில் ஈடுபட்டதாகவும், இதுகுறித்து பெற்றோரிடம் சொல்லக்கூடாது என மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் ஊர் மக்களுடன் சென்று பள்ளிக்கு வந்த ஆசிரியர் அகஸ்டின் தங்கையாவிடம் விசாரித்துள்ளனர். இதற்கு அவர் மழுப்பலாக பதில் கூறியதால் ஆத்திரமடைந்த ஊர்மக்கள் ஆசிரியரை சராமாரியாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த ஆசிரியர் அகஸ்டின் தங்கையா கூடமலையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றுக்கொண்டு வீடு திரும்பியுள்ளார், மேலும் இச்சம்பவம் குறித்து தகவலறிந்த ஆசிரியரின் உறவினர்கள் சிறுமியின் பெற்றோரிடம் பைசல் பேசியுள்ளனர்.

இதனால் மனமுடைந்த பெற்றோர் தங்களுக்கு நியயாம் வேண்டுமென்றும், மற்றொரு சிறுமிக்கும் இது போன்று பாதிப்பு ஏற்படக்கூடாது என்றும் ஆசிரியர் மீது கெங்கவல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் கெங்கவல்லி போலீசார் ஆசிரியர் அகஸ்டின் தங்கையாவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், 5ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை அளித்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com