அப்ரூவராக மாறும் காவல் ஆய்வாளர்.. சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் திடீர் திருப்பம்!
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை மகனான ஜெயராஜ் - பென்னிக்கிஸ் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், விசாரணையின் போது காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் கொடூரமான முறையில் உயிரிழந்தனர்.
இதனையடுத்து தந்தை-மகன் உயிரிழந்தது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் தொடரடப்பட்ட வழக்கில், சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 9 பேரின் மீது சிபிஐ தரப்பில் முதற்கட்டமாக 2027 பக்கம் குற்றப்பத்திரிகையும், இரண்டாம் கட்டமாக கூடுதலாக 400 பக்கம் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக இந்த வழக்கு நடைபெற்று வருகிறது.
இந்த வழக்குகளில் 105 சாட்சிகளில் 52 சாட்சிகள் மட்டுமே விசாரிக்கலாம் என நீதிமன்றத்தில் சிபிஐ எழுத்துப்பூர்வமாக தெரிவித்து 52 பேரிடம் தற்போது வரை சாட்சிய விசாரணை நடைபெற்று வந்தது.
அப்ரூவராக மாறும் முதல் குற்றவாளி..
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையானது மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி வேல்முருகன் முன்பாக விசாரணை நடைபெற்றது. அப்போது காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் தரப்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
அம்மனுவில், இந்த வழக்கில் குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும், அரசாங்கத்திற்கும் காவல்துறைக்கும் நேர்மையாகவும் உண்மையாகவும் இருக்க வேண்டும் என்ற காரணத்தினால் நான் அப்ரூவராக மாற விரும்புகிறேன். என்னை தவிர்த்து மற்ற காவலர்கள் செய்த அனைத்து செயல்களையும் உண்மைகளையும் நீதிமன்றத்தில் கூற விரும்புகிறேன், எனது மனசாட்சிக்கு கட்டுப்பட்டு தந்தையும் மகனையும் இழந்த குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என விரும்புகிறேன், இந்த வழக்கில் அப்ரூவராக மாறி அரசு தரப்பு சாட்சியாக மாற விரும்புகிறேன், இந்த வழக்கில் உண்மையான குற்றவாளிகளுக்கு அதிகமான தண்டனை கிடைக்க வேண்டும், நீதிக்கு எந்த விதமான குந்தகமும் ஏற்படக் கூடாது.
மனசாட்சிக்கு கட்டுப்பட்டு உண்மையான சங்கதிகளின் முழுமையான உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக அப்ரூவராக மாறி அரசு தரப்பு சாட்சியாக மாற விரும்புகிறேன்.
இந்த வழக்கில் ஏ2 முதல் ஏ10 வரை உள்ள காவலர்கள் குறித்தும் அவர்கள் செய்த செயல்கள் குறித்த உண்மைகளை சொல்ல விரும்புகிறேன், மேற்படி இந்த வழக்கில் என்னை விடுதலை செய்து மன்னிப்பு வழங்க வேண்டும், என்னை அப்ரூவராக மாறி அரசு தரப்பு சாட்சியாக மாற்றி விவரங்களை அளிக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு குறித்து சிபிஐ பதிலளிக்க மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த திடீர் திருப்பம் வழக்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.