”காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியின் செயல் காக்கி உடையின் கம்பீரத்தை காட்டுகிறது”: அண்ணாமலை

”காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியின் செயல் காக்கி உடையின் கம்பீரத்தை காட்டுகிறது”: அண்ணாமலை
”காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியின் செயல் காக்கி உடையின் கம்பீரத்தை காட்டுகிறது”: அண்ணாமலை

சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறையொன்றின்மீது மயங்கி விழுந்திருந்த நபரை, காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி தோளில் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்றதை கனிமொழி எம்.பி, கமல்ஹாசன், அண்ணாமலை உள்ளிட்ட அரசியல்  கட்சித் தலைவர்கள் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்கள்.

கனிமொழி எம்.பி அவரது ட்விட்டர் பக்கத்தில், ”இக்கட்டான சூழ்நிலைகளில் முன்களப் பணியாளர்களின் பங்களிப்பு மகத்தானது. உயிரிழந்து விட்டதாகக் கருதப்பட்ட இளைஞரை மருத்துவமனைக்கு அனுப்பிக் காப்பாற்ற உதவிய சென்னை டி.பி. சத்திரம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி அவர்கள், மனிதத்தின் மீதான நம்பிக்கையை உறுதிப் படுத்தியிருக்கிறார்” என்று பாராட்டியுள்ளார்.

மக்கள் நீதிமய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் ”சாலையோரம் விழுந்து கிடந்தவரின் உயிரைக் காக்க தூக்கிக்கொண்டு ஓடும் காவல்துறை ஆய்வாளர் ராஜேஸ்வரியின் கடமையுணர்ச்சி பிரமிப்பூட்டுகிறது.அவரது வீரமும், சேவையும் போற்றுதலுக்குரியவை. முன்னுதாரண அதிகாரிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்” என்று பாராட்டியுள்ளார். 

பாஜக தலைவர் அண்ணாமலை, “சென்னை மாநகரத்தின் காவல் ஆய்வாளர் ஸ்ரீமதி ராஜேஸ்வரி அவர்கள் இந்த இளைஞரை காப்பாற்றி மருத்துவமனையில் தக்க நேரத்தில் சேர்ப்பதற்கு உதவியிருக்கிறார். காக்கி உடையின் கம்பீரத்தையும், அவர் மனதில் இருக்கின்ற அன்பின் ஈரத்தையும் அவருடைய செயல் வெளிப்படுத்துகிறது. வாழ்க அவருடைய சேவை” என்று பாராட்டியுள்ளார்.

 இதற்கு, முன்னதாக காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக, சென்னையில் நேற்று மாலை தொடங்கிய கனமழை தற்போது காலை வரை தொடர்ச்சியாக பெய்து வருகிறது. மழை காரணமாக மக்கள் பலருக்கும் அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. அந்தவகையில் தெருவோரங்களில் வசிப்போருக்கு இம்மழை கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. கிடைக்கும் இடங்களில் படுத்துறங்கி தங்களின் வாழ்வை நகர்த்துகின்றனர் அம்மக்கள். அந்தவகையில் சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறையில் வேலை செய்து வரும் உதயா என்பவர் கனமழை காரணமாக கல்லறைக்குள்ளேயே தங்கி இருந்திருக்கின்றார். கனமழை தொடர்ந்த காரணத்தால் உதயா உடல் நிலை பாதிக்கப்பட்டு அங்கேயே மயக்கமாகி இருக்கிறார். அவரை அங்கு கண்ட அப்பகுதி மக்கள், காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்து டி.பி.சத்திரம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி அங்கு சென்று, முறிந்து விழுந்த மரங்களை அகற்றி உதயாவை தனது தோளில் வைத்து ஆட்டோவில் ஏற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். காவல் ஆய்வாளர் அவரை தூக்கி செல்லும் காட்சி, பார்ப்போரை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com