சென்னையில் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியது மற்றும் தடையை மீறி ஊர்வலம் சென்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 208 பேர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கல்லூரி நிர்வாகத்திற்கு காவல்துறை பரிந்துரை செய்துள்ளது.
கடந்த ஒன்றாம் தேதி கொரோனா விதிகளை மீறி ஊர்வலமாக சென்று கல்லூரி வளாகத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்ததாக 200 மாணவர்கள் மீது கீழ்பாக்கம் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையை பதிந்துள்ளனர். அதேபோல கடந்த 3-ஆம் தேதி அரசுப் பேருந்தில் ஏறி அட்டகாசம் செய்து பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக 8 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய சென்னை காவல் உதவி ஆணையர் ரமேஷ், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள 208 மாணவர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கல்லூரி நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்துள்ளதாக கூறினார்.