உயிரிழந்த காவலர்களின் குடும்பங்களுக்கு 26 லட்சம் ரூபாய் நிதி திரட்டிய காவலர்கள்!
சென்னை காவல் துறையில் பணியின் போது இறந்த இரண்டு தலைமை காவலர்களின் குடும்பத்திற்கு காவலர்களின் சார்பாக நிதி திரட்டப்பட்டு 26,40,000 ரூபாய் வழங்கப்பட்டது.
கடந்த ஜூலை மாதம் மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவில் பணிபுரிந்து வந்த தலைமை காவலர் தேசிங்கு உயிரிழந்தார். அதே போல மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த தலைமை காவலர் ராபர்ட் என்பவரும் ஜூலை மாதம் உயிரிழந்தார். இரு காவலர்களின் குடும்பத்தினரும் இந்த உயிரிழப்புகளால் வறுமையால் பாதிக்கப்பட்டிருந்தனர். இரு காவலர்களுடன் 1999 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த காவலர்கள் அனைவரையும் தலைமைக் காவலர் சபரிநாதன் ஒருங்கிணைத்து நிதி திரட்டினார்.
இதில் சுமார் 2500 காவலர்கள் பணம் வழங்கியதில் ரூ. 26 லட்சத்து 25 ஆயிரம் நிதி சேர்ந்தது. இதனை சென்னை காவல் ஆணையரிடம் தெரிவிக்க அவர் தன் பங்கிற்கு 15 ஆயிரம் ரூபாய் வழங்கினார். மொத்தமாக சேர்ந்த நிதியை இரு குடும்பத்தினரையும் வரவழைத்து தலா ரூ. 13 லட்சத்து 20 ஆயிரம் பகிர்ந்து அளிக்கப்பட்டது. உயிரிழந்த இரு காவலர்களுக்கும் இரு குழந்தைகள் உள்ள நிலையில் காவலர்களின் இந்த கூட்டு முயற்சியை சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் பாராட்டினார்.
இதே போல் தமிழ்நாட்டில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 350 மாணவர்களுக்கு கல்வி உதவி தொகைகளை ஆண்டு தோறும் JITO (Jain International Trade Organization) அமைப்பினர் வழங்கி வருகின்றனர். இதே போல் இந்த வருடமும் பொருளாதாரத்தில் பின்தங்கிய 6 மாணவர்களுக்கு JITO (Jain International Trade Organization) அமைப்பினர் சார்பாக காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் மாணவர்களுக்கு வழங்கினார். மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் பணியிலிருக்கும்போது உயிரிழந்த காவலர்கள் மற்றும் கொரோனாவால் உயிரிழந்த காவலர்களின் குழந்தைகளுக்குண்டான கல்வி செலவை ஏற்று கொள்வதாக JITO- (Jain International Trade Organization) அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், கூடுதல் ஆணையர் அமல்ராஜ், JITO- (Jain International Trade Organization) சென்னை சேப்டர் தலைமை செயலாளர் நிமிஷ் டோலியா ஆகியோர் கலந்து கொண்டனர்.