சிலை கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்ட டிஎஸ்பி காதர் பாட்சாவை போலீஸ் காவலுக்கு அனுப்புவது குறித்து வரும் 18-ஆம் தேதி முடிவை அறிவிப்பதாக கும்பகோணம் நீதிமன்றம் கூறியுள்ளது.
கும்பகோணத்தில் நேற்று கைது செய்யப்பட்ட காதர்பாஷா, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் நீதிமன்ற காவலில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் அவரை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி பொன்.மாணிக்கவேல் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம், காவலில் அனுப்புவது குறித்து வரும் 18-ஆம் தேதி முடிவை அறிவிப்பதாகத் தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தது.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆலடிப்பட்டி கிராமத்தில் கடந்த 2008-ஆம் ஆண்டு விவசாய நிலத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட மூன்று ஐம்பொன் சிலைகள் திடீரென காணாமல் போனது. 9 ஆண்டுகளாக இந்த சிலை கடத்தல் விவகாரம் வெளியே தெரியாத நிலையில், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜியாக பொன்.மாணிக்கவேல் பொறுப்பேற்றதும், திருவள்ளூர் காவல் துணை ஆய்வாளர் காதர் பாட்ஷாவும், கோயம்பேடு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சுப்புராஜூம் இணைந்து அந்த சிலையைக் கடத்தி விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த ஜூன் 30-ஆம் தேதி சுப்புராஜ் கைது செய்யப்பட்டதால், காதர் பாட்ஷா தலைமறைவானார். பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட அவரை தீவிரமாக தேடி வந்த சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் நேற்று கும்பகோணத்தில் சுற்றி வளைத்து கைது செய்தனர்.