திண்டிவனத்தில் தலைமைக் காவலர் ஒருவர் மதுபோதையில் காரை ஓட்டியதால் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த பெரமண்டூர் பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ். இவர் கோபாலபுரத்தில் உள்ள தனது வயல் வெளியை பார்வையிட்டு விட்டு புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை வழியாக வீட்டுக்கு இருச்சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது புதுச்சேரியிலிருந்து திண்டிவனம் நோக்கி வந்த போலீஸ் கார் ஒன்று கோபாலபுரம் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது பின்பக்கமாக மோதி விபத்தை ஏற்படுத்தியது.
இதில் இருசக்கர வாகனத்தில் பயணித்த தர்மராஜ் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஆனால் விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுனர் காரை நிறுத்தாமல் சென்றுள்ளார். இதனையடுத்து அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் காரை 3 கிலோ மீட்டர் தூரம் வேகமாக துரத்தி சென்று மடக்கி பிடித்தனர்.
மேலும் கார் ஓட்டுனருக்கு தர்ம அடி கொடுத்து மயிலம் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், விபத்தை ஏற்படுத்தியவர் செய்யாறில் தலைமைக் காவலராக பணியாற்றி வரும் குமரவேல் என்பதும் தனது நண்பர்களுடன் புதுச்சேரிக்கு சென்று மது அருந்தி விட்டு, மீண்டும் செய்யாறு செல்லும்போது மது போதையில் விபத்தை ஏற்படுத்தியதும் தெரியவந்தது.