சென்னையில் அனுமதியின்றி நடந்த `DJ’ பார்ட்டி - அளவுக்கதிகமாக குடித்ததால் ஒருவர் உயிரிழப்பு

சென்னையில் அனுமதியின்றி நடந்த `DJ’ பார்ட்டி - அளவுக்கதிகமாக குடித்ததால் ஒருவர் உயிரிழப்பு
சென்னையில் அனுமதியின்றி நடந்த `DJ’ பார்ட்டி - அளவுக்கதிகமாக குடித்ததால் ஒருவர் உயிரிழப்பு

சென்னையில் காவல்துறை அனுமதி இல்லாமல் "DJ" ஆடல் பாடலுடன் மது விருந்து நிகழ்ச்சி நடத்தியதால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அங்கிருந்த மதுபாட்டிகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அளவுக்கு அதிகமாக மதுகுடித்த இளைஞரொருவர், அங்கு மயங்கி விழுந்து கிடந்த நிலையில், தற்போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார்.

"Great Indian Gathering" என்ற நிகழ்ச்சி பிரேசில் நாட்டைச் சேர்ந்த "Mandra gora" என்ற உலகப்புகழ் பெற்ற நபரால் சென்னையில் DJ நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளதாக விளம்பரப்படுத்தப்பட்டது. சென்னை திருமங்கலம் வி.ஆர்.மாலில் 4-வது தளத்தில் DJ ஆடல் பாடல் நிகழ்ச்சி நடப்பதாக ஆன்லைன் மூலம் டிக்கெட் விற்கப்பட்டது. ரூ. 1500க்கு டிக்கெட் கொடுத்து நேற்று இரவு நிகழ்ச்சி நடந்தது. இதற்கு முறையாக அனுமதி வாங்கவில்லை என்றும், மதுவிருந்து நடப்பதாகவும் அண்ணாநகர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே திருமங்கலம் போலீசார், அண்ணாநகர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்தனர்.

அப்போது இதில் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து சுமார் 900 இளைஞர்கள் கலந்து கொண்டு மது விருந்து அளிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் 21 வயதுக்கும் குறைவான ஆண் பெண்ணிற்கும் மது அளிக்கப்பட்டதும், எந்த ஒரு அனுமதியும் பெறாமல் இந்நிகழ்ச்சியை நடத்தியதும் தெரியவந்ததால் போலீசார் நிகழ்ச்சியை நிறுத்தினர். மேலும் அனைவரையும் நான்காவது மாடியில் இருந்து அப்புறப்படுத்தினர். 844 விலை உயர்ந்த மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தமிழ்நாடு மதுவிலக்கு சட்டப்பிரிவின் கீழ் அண்ணாநகர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நிகழ்ச்சி நடத்திய விக்னேஷ் சின்னதுரை, மார்க், பாரத் மற்றும் சிலர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த மது விருந்து நிகழ்ச்சியில் மடிப்பாக்கத்தைச் சேர்ந்த பிரவீன் (23) என்பவர் தனது நண்பர்களுடன் கலந்து கொண்டார். பாடலுக்கு நடனமாடி கொண்டிருந்த போது பிரவீன் திடீரென மயங்கி விழுந்தார். உடனே நண்பர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அளவுக்கு அதிகமாக மதுபோதையில் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது மேல்சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிரவீன் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி அவர் மருத்துவமனையில் உயிரிழந்திருக்கிறார். இது குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மது விருந்தில் போதை பொருட்கள் பயன்படுத்தப்ட்டதா என்ற கோணத்திலும் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

-சுப்பிரமணியன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com