தடை உத்தரவை மீறிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
144 தடை உத்தரவை மீறி செயல்பட்ட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை உட்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய் தொற்று வேகமாக பரவி வருவதால் தமிழகம் முழுவதும் உள்ள வணிக வளாகங்கள், தியேட்டர்கள், கல்வி நிலையங்களை 31 ஆம் தேதி வரை மூட தமிழக முதல்வர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
குறிப்பாக பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என அறிவுறுத்தி இருந்தார். மேலும் 5க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து ஏப்ரல் 14-ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு தடை உத்தரவு பிறப்பித்து பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். இந்தநிலையில் இன்று 144 தடை உத்தரவை மீறி திருவல்லிக்கேணி பகுதியில் சுற்றி திரிந்தவர்களான ரமேஷ் குமார்(34),டேனியல்(30),மற்றும் பாலாஜி(23) ஆகியோர் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதாவது அரசு விதித்த தடையை மீறி வெளியே செல்லுதல் மற்றும் நோய் தொற்று பரவ காரணமாக இருந்ததாகவும் 269,188 ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.