சாலையோரத்தில் நின்ற வாகனத்தை அடித்து நொறுக்கிய காவலர் - வீடியோ
சென்னையில் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தை காவலர் ஒருவர் , அடித்து உடைக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
சென்னை கிண்டி சத்யா நகர் போர்நினைவுச் சின்னம் எதிரே, இளைஞர் ஒருவர் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். அப்போது அந்த வழியே ரோந்து வாகனத்தில் வந்த காவலர் ஒருவர், இரு சக்கர வாகனத்தை தடியால் அடித்து உடைத்தார். வாகனத்திற்கு சொந்தமான நபர் , எவ்வித வாக்குவாதத்திலும் ஈடுபடாமல் இரு சக்கர வாகனத்தை எடுத்துச் சென்றார்.
இரு சக்கர வாகனத்தை காவலர் ஒருவர் , அடித்து நொறுக்கியபோது உதவி ஆய்வாளர் ஒருவரும் உடனிருந்தார். இது குறித்து சம்பந்தப்பட்ட காவல்துறையினரிடம் கேட்டபோது, கல்லூரி மாணவர் ஒருவர் கஞ்சா வாங்க முயன்றதாகவும், பலமுறை கூறியும் போக மறுத்ததால் அவரின் வாகனத்தை தாக்கியதாகவும் கூறியுள்ளனர்.
வாகனம் எதற்காக சேதமடைந்தது எனப் பெற்றோர் கேட்கும்போது அந்த மாணவனால் எப்படி பதில் கூற முடியும் என்பதற்காக தாக்கியதாக காவல்துறை தெரிவித்துள்ளது. எனினும், இரு சக்கர வாகனத்தை காவலர் அடித்து நொறுக்கியதற்கு, பல்வேறு தரப்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இரு சக்கர வாகனத்தை போலீசார் அடித்து நொறுக்கிய காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.