அம்பத்தூர் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை குண்டுகட்டாக தூக்கிய காவல்துறையினர் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அம்பத்தூர் அடுத்த மேனாம்பேடு பிள்ளையார் கோவில் தெரு, ஏகாம்பரம் நகர் பகுதியில் நேற்று கனமழை பெய்தது. இதனால் மழைநீருடன் கழிவு நீரும் சேர்ந்து வீட்டிற்குள் புகுந்ததால் பொதுமக்கள் மிகுந்த அவதிப்பட்டு வந்தனர்.
இதுகுறித்து அம்பத்தூர் மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் அம்பத்தூர் - மதுரவாயல் சர்வீஸ் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த போலீசார் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்ல மறுத்த பொதுமக்களை காவல்துறையினர் கலைக்க முயன்றனர். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு செவி கொடுக்காத பொதுமக்கள் மீது காவல்துறை தாக்குதல்
நடத்தி குண்டுகட்டாக தூக்கிச்சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.