போலி ரயில்வே பணி நியமன ஆணை கொடுத்த 7 பேர் கைது
ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்றுக்கொண்டு போலியான பணி நியமன ஆணையைக் கொடுத்து ஏமாற்றிய வழக்கில் 2 பெண்கள் உட்பட 7 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை, அன்னனூர், சிவசக்தி நகரைச் சேர்ந்தவர் புருஷோத்தமன். இவருக்கு அறிமுகமான நபர்கள் சிலர் புருஷோத்தமனிடம் ரயில்வேத் துறையில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி அவரிடமிருந்து 12 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுள்ளனர். பின்னர் அவருக்கு போலியான பணி நியமன ஆணையைக் கொடுத்து ஏமாற்றி தலைமறைவாகியுள்ளனர். இந்நிலையில் இது தொடர்பாக புருஷோத்தமன் சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் புருஷோத்தமனிடம் ரயில்வேத் துறையில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி 12 லட்சம் ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு போலியான பணி நியமன ஆணையைக் கொடுத்து ஏமாற்றிய அம்பத்தூரைச் சேர்ந்த பௌலின்மேரி (எ) ஜெயசீலி (47), கொளத்தூரைச் சேர்ந்த டில்லிபாபு (47), தண்டையார்பேட்டையைச் சேர்ந்த பிரிதிவிராஜ் (36), மதுரை நரிமேடு பகுதியைச் சேர்ந்த சுந்தரம் (38), கேரள மாநிலம் ஆலப்புழையைச் சேர்ந்த ஸ்ரீஜா (46), சுரேந்திரன் (59) மற்றும் திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த கனவாபீர் (39) ஆகிய 7 பேரை மத்திய குற்றபிரிவு போலீசார் கைது செய்யப்பட்டனர்.
குற்றவாளிகளிடமிருந்து போலி பணி நியமன ஆணைகள் மற்றும் மோசடி செயலுக்கு பயன்படுத்திய கணிணியின் வன்தட்டு ஆகியவையும் போலீசார் பறிமுதல் செய்து கைது செய்யப்பட்ட 7 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.