ரூபாய் ஆயிரத்துக்கு மது அருந்தினால் டி.வி.பரிசு ! பேனர் வைத்தவர் கைது
சென்னையில் ரூ. 1000த்துக்குமேல் மது அருந்தினால் குலுக்கல் முறையில் எல்இடி டிவி வழங்கப்படும் என்று பேனர் வைத்த அதிமுக நிர்வாகி உட்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பட்டாசு, பலகாரத்திற்காக தீபாவளிக்கு ஏங்குபவர் ஒருபக்கம் இருந்தாலும், மறுபக்கம் மது அருந்த மதுக்கடைக்கு படையெடுக்கும் மதுப்பிரியர்களும் இருக்கின்றனர். சென்னையில் தீபாவளியை முன்னிட்டு திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, வல்லப தெரு மற்றும் அக்ரஹாரம் தெரு ஆகிய இடங்களில் 3 விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. அதில் "The Mount Rivera The Business Class Hotel with Bar"-ல் ஆயிரம் ரூபாய்க்கு மேல் மதுஅருந்துபவர்களுக்கு குலுக்கல் முறையில் டிவி, வாஷிங் மெஷின் Led TV ஆகியவை பரிசாக வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டு விளம்பரப்படுத்தி இருந்தனர்.
இந்நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஜாம்பஜார் காவல்துறையினர் பேனரை அகற்றினர். இதைத்தொடர்ந்து பார் மேலாளர் வின்சென்ட் ராஜ் (25), பார் உரிமையாளரின் உதவியாளர் ரியாஸ் அகமது (41) ஆகியோரை ஜாம்பஜார் காவல்துறையினர் கைது செய்தனர். இதனையடுத்து Bar ல் இருந்து LED TV-1,Washing Mechine-1, Fridge-1, குலுக்கல் பெட்டி ஆகியவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இவர்கள் இருவர் மீதும் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். பார் உரிமையாளர் முகமது அலி ஜின்னா அதிமுகவின் முன்னாள் கவுன்சிலர் என்றும் அதிமுக சிறுபான்மையினர் பிரிவு மாவட்ட செயலாளராகவும் உள்ளதாகவும் அவர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் காவல்துறைய்னர் தெரிவித்தனர்.