சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை : ஒரே மாதத்தில் 355 பேர் போக்சோவில் கைது !

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை : ஒரே மாதத்தில் 355 பேர் போக்சோவில் கைது !
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை : ஒரே மாதத்தில் 355 பேர் போக்சோவில் கைது !

தமிழகத்தில் சிறுமியர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஏப்ரல் மாதத்தில் மட்டும் 355 காமுகர்களை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது 

தமிழகத்தில் 18 வயதுக்கு குறைவான சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளாக்குவர்களை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்கின்றனர். இந்த நிலையில் ஏப்ரல் மாதம் முதல் தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு வெளியேறும் சிறுமியரை காமுகர்களின் பார்வையில் சிக்கி பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்படுகின்றனர். சேலம் மாநகரில் உள்ள மூன்று அனைத்து மகளிர் காவல் நிலையங்களிலும் ஏப்ரல் முதல் நாள் துவங்கி நேற்று வரை ஏழு பேரும், சேலம் மாவட்டத்தில், உள்ள ஐந்து அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் 15 பேரும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதுதொடர்பாக தமிழக காவல்துறையின் குற்ற ஆவண காப்பக அதிகாரிகள் அளித்த தகவல்படி, மாநிலம் முழுவதும் உள்ள 385 அனைத்து மகளிர் காவல் நிலையங்களிலும், கடந்த மார்ச் மாதத்தில் 175 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைதாகி உள்ளனர் என்றும், ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் முதல் ஏப்ரல் 21-ம் தேதி வரை 355 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலை  தெரிவித்துள்ளனர். குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகள் ஏப்ரல் மாதத்தில் இரண்டு மடங்காக அதிகரித்திருப்பது, காவல்துறை அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் இத்தகவல் குறித்து காவல்துறை அதிகாரிகள் கூறும்போது, போக்சோ சட்டத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் பெண் ஆய்வாளர்களால் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆண் ஆய்வாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனில், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்த பெண் காவலர், உதவி ஆய்வாளர் ஆகியோரில் ஒருவர் கட்டாயம் உடன் இருக்க வேண்டும். இந்த விதியால், வழக்குப்பதிவு செய்வதை ஆண் ஆய்வாளர்கள் தவிர்ப்பதோடு, பெண் ஆய்வாளர்களுக்கு புகாரை மாற்றி விடுகின்றனர். எனவே இச்சட்டத்தில் கைது செய்யப்படுபவர்களுக்கு, குறைந்த பட்சம் ஆறு மாதம் ஜாமின் கிடைக்காத வகையில் சட்டத்தை கடுமையாக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.

மேலும் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சட்டம் ஒழுங்கு ஆண் காவல் ஆய்வாளர்களும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும். அப்போது தான் சிறுமியரை குறி வைத்து பாலியல் தொல்லை கொடுக்கும் காமுகர்களை முழுமையாக ஒடுக்க முடியும் என்று கூறுகின்றனர்.

தகவல்கள் : தங்கராஜ், செய்தியாளர்- ஓமலூர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com