தடையை மீறி போராட்டம்.. கைது செய்யப்பட்டார் சௌமியா அன்புமணி!
அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமைக்கு எதிராக திமுக அரசை கண்டித்து எதிர்க்கட்சிகள் பல போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றன. இந்த வகையில், பாமக மகளிர் அணியின் சார்பில் சௌமியா அன்புமணி தலைமையில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில், நுங்கம்பாக்கம் காவல்துறையினர் அனுமதி மறுத்தனர்.
இருப்பினும், தடையை மீறி திட்டமிட்டபடி இன்று போராட்டம் நடத்தப்படும் என்று பாமக மகளிர் அணி அறிவித்தது. இதன்படி, இன்று போராட்டமும் நடந்தது. இந்நிலையில், சௌமியா அன்புமணி உட்பட தடையை மீறி போராடிய பாமகவினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கிட்டதட்ட 300க்கும் மேற்பட்ட காவல்துறையினர் வள்ளுவர் கோட்டத்தில் குவிக்கப்பட்ட நிலையில், அங்கே பதற்றமான சூழல் நிலவியது. முன்னதாக பாஜக, நாம் தமிழர் கட்சிகளும் தடையை மீறி போராட்டத்தை மேற்கொண்டனர். அவர்களும் கைது செய்யப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.