பரதம், கதகளி, ராமாயண நாட்டிய நடனம் ! மகிழ்ச்சியோடு ரசித்த மோடி, ஜின்பிங்
மாமல்லபுரம் கடற்கரை கோயிலில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை சீன அதிபருடன் பிரதமர் மோடியும் கண்டுகளித்தார்.
சென்னை மாமல்லபுரம் வந்தடைந்த சீன அதிபர் ஷி ஜின்பிங்கை, பிரதமர் மோடி தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து வரவேற்றார். தொடர்ந்து மாமல்லபுரம் சிற்பங்கள் குறித்து சீன அதிபருக்கு பிரதமர் மோடி விளக்கினார். மாமல்லபுரத்தில் வெண்ணெய் உருண்டை பாறை முன் இருவரும் கைகளை கோர்த்து உயர்த்தி ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.
இதனையடுத்து மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோயிலுக்கு பிரதமர் மோடி, சீன அதிபர் ஸி ஜின்பிங் இருவரும் சென்றனர். அந்த நேரத்தில் கடற்கரை கோயில் மின்னொளியில் ஜொலித்தது. தொடர்ந்து கடற்கரை கோயிலில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை சீன அதிபருடன் பிரதமர் மோடியும் சேர்ந்து கண்டுகளித்தார். பரதநாட்டியம், கதகளி உள்ளிட்ட நாட்டிய நிகழ்ச்சிகளை இருவரும் கண்டு ரசித்தனர்.
கலை நிகழ்ச்சிகளில் ராமாயண காவியம் நடன வடிவில் நிகழ்த்தப்பட்டது. அந்த நேரத்தில் ராமாயண காட்சி, நாட்டிய நிகழ்ச்சி குறித்து சீன அதிபருக்கு அவ்வப்போது பிரதமர் மோடி எடுத்துரைத்தார். தொடர்ந்து சீன அதிபர் ஸி ஜின்பிங்கிற்கு நினைவுப் பரிசுகளாக நாச்சியார் கோயில் அன்னம் விளக்கு, தஞ்சை நடனமாடும் சரஸ்வதி ஓவியத்தை பிரதமர் மோடி வழங்கினார். தமிழ்நாடு கைவினைப்பொருட்கள் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட பரிசுகளையும் பிரதமர் மோடி சீன அதிபருக்கு வழங்கினார்.