பிரிட்டனிலிருந்து சென்னை வரும் பயணிகள் அனைவரையும் தனிமைப்படுத்தி கொரோனா பரிசோதனை செய்த பின்னரே வீட்டிற்கு அனுப்பப்படுவர் என சென்னை மாநகர ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து புதிய தலைமுறைக்கு பேட்டியளித்த அவர், உருமாறிய புதிய கொரோனா தொற்றால் யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால், அவர் வசிக்கும் தெருவில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யத் திட்டமிட்டுள்ளதாகக் கூறினார். மேலும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு கொரோனா அறிகுறி இருந்தால் உடனடியாக மாநகராட்சியினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் கடந்த ஒரு மாதமாக பிரிட்டனிலிருந்து வந்தவர்களை கண்காணிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
முன்னதாக, அவசர அவசரமாக கொரோனா ஃபைசர் தடுப்பு மருந்துக்கு ஓப்புதல் அளித்து, உலகிலேயே முதன்முறையாக தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டுவந்த பிரிட்டன் மற்றொரு பேராபத்துக்குள் சிக்கியுள்ளது. கொரோனா வைரஸின் முதல் அலை, இரண்டாம் அலையை கடந்துவந்த மக்களுக்கு, மரபியல் மாற்றம் கண்ட கொரோனா வைரஸை தாக்குப்பிடிப்பது மிகப்பெரிய சவலாக உள்ளது.
உருமாற்றம் கண்ட புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றும் தன்மை 70 சதவீதம் அதிகமுள்ளதாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனிடையே பிரிட்டனிலிருந்து டெல்லி வந்த 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அது உருமாறிய புதிய வகை கொரோனா தொற்றா என கண்டறியும் சோதனைகள் நடைபெற்று வருகிறது.