சென்னை எண்ணூரில் கப்பல் மோதி கச்சா எண்ணெய் கசிந்த விபத்திற்கு மனிதத் தவறுகளே காரணம் என மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
சென்னை எண்ணூர் துறைமுகத்தில் கடந்த ஜனவரி 28ஆம் தேதி பி.டபிள்யு மேபிள் என்ற கப்பலும் டான் காஞ்சிபுரம் என்ற கப்பலும் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் டான் காஞ்சிபுரம் கப்பலில் இருந்து கச்சா எண்ணெய் கசிந்து கடலில் கலந்ததால், பெரும் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்பட்டது. விபத்து குறித்து சர்ச்சைகள் எழுந்த நிலையில், இதற்குக் காரணம் மனிதத் தவறுகளே என்று மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது. விபத்திற்கு முழுக்காரணம் இரு கப்பல்களையும் இயக்கியவர்களின் கவனக்குறைவுதான் என்று தெரியவந்துள்ளது.
பி.டபிள்யு மேபிள் கப்பல் ஊழியர்கள் அதிக நேரம் பணியில் ஈடுபட்டதன் காரணமாக ஏற்பட்ட சோர்வினால் விபத்து ஏற்பட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கப்பல் இயக்கும் குழுவில் விபத்தை கட்டுப்படுத்தும் அளவிற்கு போதுமான ஆட்கள் இல்லை என்றும், அடிப்படைத் தகுதி கூட இல்லாதவர்கள் விபத்தின் போது, பி.டபிள்யு மேபிள் கப்பலை இயக்கினார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. எண்ணெய்க் கசிவை தடுக்க ஊழியர்கள் தவறிவிட்டனர் என்றும் டான் காஞ்சிபுரம் கப்பலின் மாலுமிகளுக்கு விபத்து கால நடவடிக்கை குறித்து போதிய பயற்சி இல்லை என்றும் கப்பல் போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.