உடலுழைப்பு சார்ந்த தொழிலாளர்கள் அதிகம் வாழக்கூடிய வட சென்னையின் வாழ்வியலை பதிவு செய்யும் வகையில் காசிமேட்டில் சென்னை பல்கலைக்கழக இதழியல் மற்றும் தொடர்பியல்துறை மாணவர்கள் நடத்திய புகைப்பட கண்காட்சி கவனத்தை ஈர்த்துள்ளது.
உழைக்கும் சென்னை மக்களின் உணர்வுகளையும், வாழ்வியலையும் விளக்கும் வகையில் புகைப்படக் கண்காட்சி ஒன்று காசிமேட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மீனவர்களின் வேலைப்பாடு, மாட்டுவண்டி இழுத்தல், இரைச்சி வெட்டுதல் உள்ளிட்ட புகைப்படங்கள் அதில் இடம்பெற்றிருந்தன. அந்திசாயும் வேளையில் நாட்டுப்படகுகள் சூழ, கடல்காற்று நடுவில் நடந்த இந்தக் கண்காட்சியை பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
இது குறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சுகுமார் தங்கராஜ், வட சென்னை தொழிலாளர்களின் வாழ்வியலை எதிர்கால தலைமுறைக்கு கொண்டு செல்லும் முயற்சியில் இந்தக் கண்காட்சியை நடத்த திட்டமிட்டோம். ‘மெட்ராஸ் மரபினர்’ என்ற எங்கள் மாணவர் அமைப்பு, சென்னையின் சிறப்புகளை புகைப்படங்கள், எழுத்துக்கள் மூலம் ஆவணப்படுத்தி அதை இளைய தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்குடன் தொடங்கப்பட்டது. அதற்கான முதற்படிதான் இக்கண்காட்சி. இதற்கு மக்கள் கொடுத்துள்ள ஆதரவு மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
செய்யும் தொழில், தொழில் செய்யும் இடம், கருவிகள் எல்லாம் கால வேகத்தில் மாறிக்கொண்டே செல்லும் நிலையில், தொழிலாளர்களின் வாழ்வியலை காட்சிப்படுத்தும் சிறந்த பதிவாக அமைந்தது இந்தக் கண்காட்சி. கடற்கரை இயற்கை காற்று சூழ நடந்த இந்த வகையான புகைப்பட கண்காட்சி பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தை ஏற்படுத்தியது என்றே கூறலாம்.