ஆகம விதி எதுவும் இல்லை - அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க கோரி மனு

ஆகம விதி எதுவும் இல்லை - அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க கோரி மனு
ஆகம விதி எதுவும் இல்லை - அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க கோரி மனு

அத்திவரதர் தரிசனத்திற்கு எந்த ஆகம விதிகளும் இல்லாததால், அத்திவரதர் தரிசன உற்சவத்தை நீட்டிக்கும்படி கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் இருந்து 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை எடுக்கப்படும் அத்திவரதர் சிலை கடந்த ஜூலை 1ம் தேதி எடுக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 17 ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில், அத்திவரதரை 48 நாட்களுக்கு பின் மீண்டும் குளத்தில் வைக்க வேண்டும் என எந்த ஆகம விதியும் இல்லை என்பதால், தரிசனத்தை நீட்டிக்க வேண்டும் என, சென்னை பெரம்பூரைச் சேர்ந்த தென் இந்திய ஹிந்து மகா சபா தலைவர் வசந்தகுமார் உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுவைத் தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், 1703 ம் ஆண்டு கோவில் நிர்வாகிகள், குளத்தை சுத்தப்படுத்திய போது, அத்திவரதர் சிலை கண்டெடுக்கப்பட்டது. அதன்பின், 1937 ம் ஆண்டு சிலை எடுக்கப்பட்டு, 40 நாட்கள் பூஜை செய்யப்பட்டது. 42 ஆண்டுகளுக்கு பின், 1979ல் மீண்டும் சிலை எடுக்கப்பட்ட போது, 13 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், தரிசன நாட்கள் 40ல் இருந்து 48 ஆக அதிகரிக்கப்பட்டது எனக் கூறியுள்ளார்.

தற்போது, ஒரு நாளைக்கு 5 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்து வரும் நிலையில், லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர். எந்த ஒரு ஆகம விதியும் இல்லாத நிலையில், தரிசன நாட்களை நீட்டிக்கும்படி அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அமர்வில் நாளை (ஆகஸ்ட் 16) விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com