விஜய் சேதுபதி, கோபி நயினாருக்கு பெரியார் விருது
நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் கோபி நயினாருக்கு 2017ஆம் ஆண்டுக்கான பெரியார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் 1995ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 24 ஆண்டுகளாக ‘பெரியார்’ பெயரில் விருது வழங்கப்பட்டு வருகிறது. இயல், இசை, நாடகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி, சமூகத்தின் முற்போக்கு வளர்ச்சிக்கு பாடுபட்டுவரும் தமிழர்களை தெரிந்தெடுத்து தை முதல் நாளாம் தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாளையொட்டி இந்த விருது வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டும் பல்துறைகளில் சிறந்து விளங்குகின்ற தமிழர்களுக்கு ‘பெரியார் விருது’ அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் சேதுபதி, கவிஞர் செவ்வியன், திரைப்பட இயக்குநர் கோபி நயினார், பறையிசைக் கலைஞர் வேலு ஆசான், ஓவியர் ஹாசிப்கான், நடிகர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன், மராத்தான் வீரர் சைதை மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ, இன்னிசை ஏந்தல் திருபுவனம் ஆத்மநாதன், இயக்குநர் ஒளிப்பதிவாளர் செழியன், கவிஞர் சல்மா, ஓவியர் அபராஜிதன் ஆகியோருக்கு ‘பெரியார் விருது’ வழங்கப்படவுள்ளது.
ஜனவரி 15, 16 ஆகிய இரண்டு நாட்கள் சென்னை பெரியார் திடலில் நடைபெறும் திராவிடர் திருநாள் விழாவில் இவ்விருதுகள் வழங்கப்படவுள்ளன. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் மேற்கண்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று விருது வழங்கவிருக்கிறார்.