சின்னாபின்னமான சின்னாறு நீர்த்தேக்கம்: பெரம்பலூர் விவசாயிகள் வேதனை

சின்னாபின்னமான சின்னாறு நீர்த்தேக்கம்: பெரம்பலூர் விவசாயிகள் வேதனை
சின்னாபின்னமான சின்னாறு நீர்த்தேக்கம்: பெரம்பலூர் விவசாயிகள் வேதனை

வறண்ட பூமியான பெரம்பலூரை வளப்படுத்த காமராஜரால் தொலைநோக்குடன் உருவாக்கப்பட்ட சின்னாறு நீர்த்தேக்கத்திட்டம் கேட்பாரற்று உரிய பராமரிப்பின்றி மோசமான நிலையில் உள்ளது. அணையின் அவல நிலையை சரிசெய்து தரவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முக்கியமான நீர் ஆதாரங்கள் எதுவும் இல்லாத பெரம்பலூர் மாவட்டத்தை வளப்படுத்தும் நோக்கில் 1958 ஆம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சர் காமராஜரால் தொலைநோக்குப் பார்வையுடன் அமைக்கப்பட்டது சின்னாறு செயற்கை நீர்த்தேக்கம். திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் சின்னாறு எனும் இடத்தில் அமைந்துள்ள இந்த நீர்த்தேக்கம் ஒருகாலத்தில் பாசனத்திற்கு மட்டுமின்றி சுற்றுலாத்தலமாகவும் விளங்கியது. சுமார் 750 ஏக்கருக்கு பாசனநீர் அளித்த சின்னாறு நீர்த்தேக்கம் தற்போது கேட்பாரற்று பராமரிப்பின்றி அடையாளம் இழந்து காணப்படுகிறது.

நெடுஞ்சாலை அருகில் இருந்ததால் இவ்வழியாகச் சென்ற முக்கிய பிரமுகர்கள் இங்குள்ள பயணியர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வு எடுத்துச் சென்றிருக்கிறார்கள். ஆனால், இப்போதோ அந்த மாளிகை பாழடைந்த மண்டபமாக காட்சியளிக்கிறது.

பச்சை மலையிலிருந்து வரும் காட்டாற்று தண்ணீரை சேமித்து பாசனத்திற்கு திருப்பிவிடும் வகையில் கட்டப்பட்ட சின்னாறு நீர்த்தேக்கத்தை மீண்டும் புதுப்பித்து விவசாயத்திற்கு பயன்படும் வகையில் செய்ய வேண்டும் என்று இப்பகுதி மக்கள் வலியுறுத்துகிறார்கள். நீர் மேலாண்மையின் அவசியத்தை உணர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் சின்னாறு நீர்த்தேக்கத்திற்கு புத்துயிர் கொடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com