\
'மக்கள் மருத்துவர்' பார்த்தசாரதி கொரோனா தொற்றால் மறைவு: கதறி அழுத வடசென்னை மக்கள்

'மக்கள் மருத்துவர்' பார்த்தசாரதி கொரோனா தொற்றால் மறைவு: கதறி அழுத வடசென்னை மக்கள்

'மக்கள் மருத்துவர்' பார்த்தசாரதி கொரோனா தொற்றால் மறைவு: கதறி அழுத வடசென்னை மக்கள்
Published on

வடசென்னையில் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்த்து வந்த டாக்டர் பார்த்தசாரதி (84) கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த மருத்துவர் பார்த்தசாரதி, சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். பின்னர், வண்ணாரப்பேட்டை பகுதியில் தமது இல்லத்திலேயே சிறிய அளவிலான மருத்துவமனை அமைத்து, ஆரம்ப காலக்கட்டத்தில் 60 பைசா கட்டணத்தில் இருந்து மக்களுக்கு மருத்துவம் பார்க்கத் தொடங்கி, கால மாற்றத்திற்கு ஏற்ப சொற்ப அளவிலான கட்டணத்திலேயே மருத்துவ சேவையை தொடர்ந்தார்.

வறுமையில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு அவர் இலவசமாகவே மருத்துவம் பார்த்து வந்துள்ளார். பள்ளிச் சீருடையில் அவரிடம் மருத்துவம் பார்க்க செல்லும் மாணவர்களுக்கு மருத்துவக் கட்டணம் இலவசம். அமெரிக்கா, லண்டன் சென்று மருத்துவம் படித்த டாக்டர் பார்த்தசாரதி, சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக 4 தலைமுறை மக்களுக்கு சேவை புரிந்து வந்தார்.

கொரோனா தொற்று ஏற்படுவதற்கு முன்பு வரை அவர் மருத்துவம் பார்த்து வந்துள்ளார். கடந்த ஒரு வாரமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டுத் தனிமையில் இருந்த அவருக்கு ஆக்சிஜன் அளவு குறைந்ததால் காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

அவரது உடலை வீட்டிற்கு எடுத்துச் சென்றபோது, அவரிடம் சிகிச்சை பெற்ற ஏராளமான பொதுமக்கள் கூடி கதறி அழுதனர். பின்னர் உடனடியாக அவரது உடல், காசிமேடு மயானத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com