சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனச்சுற்றுலா: சுற்றுலா பயணிகளிடம் வரவேற்பு
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சோதனை ஓட்டமாக துவங்கிய வனச்சுற்றுலாவுக்கு பொதுமக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதி தமிழகத்தில் உள்ள புலிகள் காப்பகங்களிலே அதிக பரப்பளவு கொண்டது. இப்பகுதியில் உள்ள சத்தியமங்கலம்,பவானிசாகர், டி.என்.பாளையம் ,தலமலை, கேர்மாளம்,தாளவாடி மற்றும் ஆசனூர் வனச்சரங்களில் வண்ணபூர்ணி வனச்சுற்றுலா திட்டம் நவ.5ம் தேதி துவக்கியது. சோதனை ஓட்டமாக துவங்கிய இந்த வனச்சுற்றுலாவுக்கு பொதுமக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
வனப்பகுதியை சுற்றிப்பார்க்க தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலாப்பயணிகள் வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை முன்பதிவு செய்தனர். முன்பதிவின் அடிப்படையில் வாரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வனச்சரகங்களில் சூழல் சுற்றுலா செல்வதற்கு வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் துவங்கிய வனச்சுற்றுலா மக்களிடம் பெரும் வரவேற்றை பெற்றதால் இரண்டாவது முறையாக வனச்சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
வண்ணபூர்ணி வனச்சுற்றுலாவுக்கு ஆசனூர், தாளவாடி, கேர்மாளம் பகுதிக்கு பெரும்பாலானோர் பதிவு செய்திருந்தனர். இதன்படி, ஆசனூரில் இருந்து இரண்டு ஜீப்புகளில் பயணிகள் அழைத்துச் செல்லப்பட்டனர். இதில் பெண்கள், குழந்தைகள், முதியோர் என அனைத்து தரப்பினரும் இயற்கையை கண்டு ரசித்தனர். அடர்ந்த வனக்குட்டை, தடுப்பணைகள் மற்றும் சிறுத்தை நடமாடும் பகுதி ஆகியவற்றை பார்வையிட்டனர்.
இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறுகையில்,பயணிகள் அடர்ந்த காட்டில் பயணிக்கும்போது வனவிலங்குகள் தாக்குதலில் இருந்து தப்பிக்க போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவில்லை என குற்றம்சாட்டினர். மேலும் விலங்குகள், நோய் மற்றும் பூச்சிகளால் பாதிக்கப்படும் பயணிகளுக்கு முதலுதவி சிகிச்சை செய்ய மருத்துவ அனுபவம் பெற்ற செவிலியர்கள் சுற்றுலா வாகனத்தில் உடன் வர வேண்டும் என்றனர்.