மக்களிடம் மிகவும் கனிவுடன் நடக்க வேண்டும் - காவல்துறையினருக்கு டிஜிபி திரிபாதி அறிவுரை

மக்களிடம் மிகவும் கனிவுடன் நடக்க வேண்டும் - காவல்துறையினருக்கு டிஜிபி திரிபாதி அறிவுரை
மக்களிடம் மிகவும் கனிவுடன் நடக்க வேண்டும் - காவல்துறையினருக்கு டிஜிபி திரிபாதி அறிவுரை

மக்களிடம் காவல்துறை கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும் என தமிழக டிஜிபி திரிபாதி காவல்துறையினருக்கு அறிவுரை வழங்கினார்.

கொரோனா முழு ஊரடங்கு நாளை அமல்படுத்தப்படுவதையொட்டி காவல்துறையினரின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்த காவல்துறை, தலைமை இயக்குனரும் சட்டம்- ஒழுங்கு டிஜிபி திரிபாதி அறிவுரைகள் வழங்கி சுற்றறிக்கை ஒன்றை காவல்துறையினருக்கு அனுப்பி உள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது:- 

காவல்துறையினருக்கு ஒதுக்கப்பட வேண்டிய பணிகள்

காவல் துணை கண்காணிப்பாளர்கள் அனைவரும் தங்களுக்கு கீழ் பணிபுரியும் காவலர்கள் ஒவ்வொருவரிடமும் ஊரடங்கு கால கட்டத்தில் அவர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து தெளிவாக எடுத்துரைக்க வேண்டும்.

ஆயுதப்படை காவலர்கள் அனைவருக்கும் சம்பந்தப்பட்ட ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் ஊரடங்கு காலகட்டத்தில் பணியின் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து தெளிவாக எடுத்துரைக்க வேண்டும். 

50 வயதைக் கடந்த காவலர்களுக்கும் மற்றும் நோய்களால் அவதிப்படும் காவவர்களுக்கும் ஊரடங்கு காலகட்டத்தில் இலகுவான பணி மட்டுமே ஒதுக்கப்பட வேண்டும். அவர்களை வாகன சோதனை மற்றும் பிக்கெட்டிங் பணி போன்றவற்றில் ஈடுபடுத்தக்கூடாது. 

பெண் காவலர்களை வாகன சோதனை பணிக்கும் மற்றும் பிக்கெட்டிங் பணி போன்றவற்றில் ஈடுபடுத்தக் கூடாது.

காவலர்களை சுழற்சி முறையில் பணியில் அமர்த்தி ஒவ்வொருவரும் 5 மணி நேர ஷிப்ட் முறையில்

பணியாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொரோனா நோய் தடுப்பூசிகளை முழுமையாக எடுத்துக் கொண்டுள்ள காவலர்களை மட்டுமே கூட்டம் கூடும் இடங்களான மார்க்கெட் போன்றவற்றில் பணி அமர்த்த வேண்டும்.

அனைத்து காவலர்களும் தவறாமல் பாதுகாப்பு பணியில் நாளை காலை 6 மணி முதல் ஈடுபடுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

காவல்துறையினர் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகள்

ஊரடங்கு காலகட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு ஒவ்வொரு காவலரும் தங்கள் உடலின் பாதுகாப்புக்கு மிகுந்து முக்கியத்துவம் அளித்து தகுந்த முன்னெச்சரிக்கை உணர்வுடன் பணியாற்ற வேண்டும்.

அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் மற்றும் கையுறை அணிந்து பணியில் ஈடுபட வேண்டும். கிருமி நாசினி கொண்டு தங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்து கொள்வதுடன், குறிப்பிட்ட இடைவெளியில் சோப்பு போட்டு கைகளை கழுவிக்கொள்ள வேண்டும்.

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள இடத்தில் காவல்துறையினர் ஒரே இடத்தில் கூட்டமாக நிற்பதை தவிர்க்க வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்றி பாதுகாப்பு பணியினை மேற்கொள்ள வேண்டும்.

மருத்துவமனை போன்ற இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவல்துறையினர் கோவிட்-19 தொடர்பாக அறிவுறுத்தப்பட்டுள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும் கண்டிப்பாக பின்பற்றி தகுந்த பாதுகாப்புடன் பணியாற்ற வேண்டும். 

பிக்கெட்டிங் பணியில் உள்ள காவலர்கள் முகக்கவசம் அணிய வேண்டும். அங்கே தேவையான நிழற்குடை, குடிநீர், கிருமிநாசினி போன்ற தேவையான உபகரணங்கள் இருக்க வேண்டும்.

அனைத்து காவலர்களும் தவறாமல் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும். மாவட்ட கொரோனா கட்டுப்பாட்டு அறை மூலம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள

காவல்துறையினருக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் வழங்கப்பட வேண்டும்.

பொதுமக்கள் மற்றும் பிற அரசு துறை அதிகாரிகளிடம் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்

பொதுமக்களிடம் காவல்துறையினர் மிகுந்த கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். எந்த சூழ்நிலையிலும் கோபமாகவோ, மரியாதை குறைவாகவோ பொதுமக்களிடம் நடந்து கொள்ளக் கூடாது.

பிற அரசுத் துறைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், வருவாய்துறையினர்,

உள்ளாட்சி மற்றும் நகராட்சி துறையினர், துாய்மை பணியாளர்கள் போன்றவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்க்கவேண்டும்.

பொது ஒலிபெருக்கியை பயன்படுத்தி மார்க்கெட் போன்ற இடங்களில் பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க அறிவுறுத்த வேண்டும்.

தடியடி நடத்தி அல்லது பலப்பிரயோகம் செய்து கூட்டத்தை கலைப்பது போன்ற காரியங்களில் எந்த சூழ்நிலையிலும் ஈடுபடக்கூடாது.

பொது மக்களை கண்ணியமான முறையில் அறிவுறுத்தி அவர்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுக்கவேண்டும்.

ட்ரோன் கேமிராக்களை பயன்படுத்தி பொதுமக்கள் கூட்டமாக கூடுகிறார்களா என்பதை கண்காணித்து முறைப்படுத்த வேண்டும்.

வணிகர்கள் மற்றும் சாலையோர வியாபாரிகளை கையாளுதல்

வணிகர்கள், சிறு வியாபாரிகள், நடைபாதை வியாபாரிகள் ஆகியோரிகளிடம் கனிவான முறையில் நடந்து கொள்ள வேண்டும். அனுமதிக்கப்பட்ட நேரம் முடிந்த பின்பு அவர்களிடம் வியாபாரத்தை முடித்து கொள்ளுமாறு கண்ணியமான முறையில் வேண்டுகோள் விடுக்க வேண்டும்.

அனைத்து உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்களும் 09.05.2021 அன்று மாலை 4 மணிக்கு தங்கள் பகுதியில் வர்த்தக சங்க நிர்வாகிகளுடம் கூட்டம் நடத்தி ஊரடங்கு கால கட்டத்தில் அவர்கள் முழு ஒத்துழைப்பு நல்குவதை உறுதி செய்ய வேண்டும்.

சாலையோர வியாபாரிகளிடம் மிகுந்த மனிதாபிமனத்துடன் நடந்து கொள்ள வேண்டும். அவர்களை கடுமையான முறையில் நடத்துதல் கூடாது.

மளிகை கடைகள், இறைச்சி கடைகள் மற்றும் காய்கறி கடைகள் போன்றவற்றில் பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும்.

அனைத்து வியாபாரிகளும் தங்கள் கடைகளின் முன்பு பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றும்

வகையில் தேவையான வட்டங்களை வரைவதை உறுதி செய்ய வேண்டும்.

அத்தியாவசியப் பொருட்களின் தடையில்லா போக்குவரத்தை உறுதி செய்தல்

ஊரடங்கு காலகட்டத்தில் பால், மளிகை பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றை எடுத்து செல்லும் வாகனங்கள் தடையின்றி செல்வதை உறுதி செய்தல் வேண்டும்.

மருத்துவ பொருட்கள் மற்றும் மருந்துகள், இதர உபகரணங்கள் ஆகியவையும் தடையின்றி எடுத்து ஆக்ஸிஜின் சிலிண்டர் எடுத்துச் செல்லப்படும் வாகனங்கள் தடையின்றி செல்வதை உறுதி செய்தல் வேண்டும்.

தேவைப்படும் நேரங்களில் ஆக்சிஜன் சிலிண்டர் வாகனங்களுக்கு பாதுகாப்பு வாகனம் பின் தொடர அவை எடுத்து செல்லப்படுவதை உறுதி செய்தல் வேண்டும். மருத்துவ துறை, தொலை தொடர்பு துறையில் பணியாற்றும் ஊழியர்கள் தங்கள் அடையாள

அட்டைகளுடன் இடையூறுகள் இன்றி பணிக்கு செல்வதை உறுதி செய்ய வேண்டும்.

மாவட்டங்களுக்கு உள்ளேயும், இரண்டு மாவட்டங்களுக்கு இடையேயும் ஆக்சிஜன் சிலிண்டர் வாகனங்கள் தடையின்றி எடுத்து செல்லப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

அளவுக்கு அதிகமான வாகனங்கள் மார்க்கெட் போன்ற இடங்களில் ஒரே நேரத்தில் செல்வதை தடுத்தல் வேண்டும். அத்தயாவசிய பொருட்களை எடுத்து செல்லும் வாகனங்கள் முறையாக ஒழுங்குபடுத்தப்பட்டு மார்க்கெட் பகுதிகளுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும்.

பொதுமக்களுக்கு விழிப்புனார்வு ஏற்படுத்துதல்

பொதுமக்கள் ஊரடங்கு காலகட்டத்தில் தங்கள் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்த வேண்டும். தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்குமாறு அறிவுரை கூற வேண்டும்.

கொரோனா விழிப்புணர்வு குறித்தும் நோய் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த வீடியோ பதிவுகளை காணுமாறு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு காவல் நிலைய எல்லையையும் பகுதிகளாக பிரித்து அனைத்து இடங்களிலும் பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு பரப்புரை மேற்கொள்ளப்பட வேண்டும்.

கிராமப்பகுதிகளில் தண்டோரா அடித்து பொதுமக்களிடம் கொரோனா நோய் தொற்றுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களை எச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்கும் படி அறிவுறுத்த வேண்டும்.

டாஸ்மாக் மதுபான கடைகளில் கூட்டத்தை ஒழுங்குபடுத்துதல்

காவல்துறையினரை தேவையான அளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தி டாஸ்மாக் கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

டாஸ்மாக் கடைகளில் மாலை 6 மணிக்குள் இன்றைய தினம் விற்பனை முடிக்கப்பட்டு கடைகள் அடைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

டாஸ்மாக் கடைகளில் தடுப்பு அரண்கள் அமைக்கப்பட்டு கூட்டத்தினருக்கு டோக்கன் வழங்கப்பட்டு அவர்கள் கோவிட் 19 விதிமுறைகளை பின்பற்றி மது பாட்டில்களை வாங்கி செல்வதை உறுதி செய்ய வேண்டும்.

காவல் நிலையத்தின் செயல்பாடுகள்

காவல் நிலையத்தில் குற்றவாளிகள் அடைத்து வைக்கப்படுவதை தவிர்க்க வேண்டும். 

காவல் நிலையத்தில் குற்றவாளிகள் வைக்க வேண்டிய பட்சத்தில் சம்பந்தப்பட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் முன் அனுமதியை பெற வேண்டும். 

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனுமதியுடன் காவல் நிலைய கட்டுப்பாட்டில் உள்ள குற்றவாளிகளுக்கு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவலர்கள் நிழல் பாதுகாப்பு பணியினை மேற்கொள்ள வேண்டும். 

காவல் நிலையத்தின் வெளியே சாமியானா பந்தல் போடப்பட்ட மனுதாரர்கள் மற்றும் பார்வையாளர்கள் அங்கே அமர வைக்கப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும்.

காவல் நிலையத்தில் உள்ளே பொதுமக்கள் வருவதை அனுமதித்தல் கூடாது. சாமியானா பந்தலில் கிருமி நாசினிகள் மற்றும் முகக்கவசங்கள் தேவையான அளவில் வைத்திருத்தல் வேண்டும்.

வாகன சோதனையின் பின்பற்ற வேண்டிய அறிவுரைகள்

ஊரடங்கு விதிமுறைகளை மீறும் வாகனத்தை புகைப்படம் எடுத்து வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

ஊரடங்கு விதிமுறை மீறலுக்காக வாகனத்தை கைப்பற்றுதல் கூடாது. அப்படியே வாகனத்தினை கைப்பற்றினாலும் சில மணி நேரங்களில் அவற்றை விடுவித்தல் வேண்டும்.

இ பாஸ் வைத்து பயண அனுமதி பெற்றுள்ள வாகனங்களை அரசின் வழிகாட்டுதல் விதிமுறைகள் படி அனுமதித்தல் வேண்டும்.

சோதனை சாவடிகளில் வாகன பரிசோதனை மேற்கொள்ளும் போது அதற்கென தனியாக ஒதுக்கப்பட்டுள்ள வழிதடத்தில் வைத்து சோதனை மேற்கொள்ள வேண்டும்.

அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருத்துவ பொருட்களை எடுத்து செல்லும் வாகனங்கள் தடையின்றி செல்வதற்கான வழியை ஏற்படுத்துதல் வேண்டும். கைப்பற்றப்படும் வாகனங்களை காவல்நிலையத்தில் வைத்திருத்தல் கூடாது. காவல் நிலையத்தில் அருகே உள்ள ஒரு மைதானத்தில் வைத்து பாதுகாக்க வேண்டும்.

சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரித்தல்

ஊரடங்கு காலகட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை சிறப்பான முறையில் பராமரித்தல் வேண்டும். சட்டமன்ற கூட்டத் தொடர் மற்றும் ரம்ஜான் பண்டிகை ஆகியவை வருவதால் தேவையான பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு அசம்பாவித சம்பவங்கள் நிகழாத வண்ணம் உறுதி செய்தல் வேண்டும்.

தனிப்பிரிவு காவலர்கள் தகுந்த முறையில் பணியாற்றி நுண்ணறிவு தகவல்களை சேகரிப்பதை உறுதி செய்து சட்டம் ஒழுங்கை சிறப்பாக பராமரிக்க தேவையான நடவடிக்கைள் எடுக்கப்பட வேண்டும், கண்காணிப்பு அதிகப்படுத்தப்பட வேண்டும்.

காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் பணிபுரியும் காவலர்கள் தங்கள் பணிகள் குறித்து முழுமையாக அறிந்து பணியாற்ற வேண்டும். காவல்துறைக்கு சம்பந்தம் இல்லா விஷயங்கள் குறித்து புகார் அளிக்கப்பட்டாலும் கூட அதனை முழுமையாக பதிவு செய்வதுடன் சம்பந்தப்பட்ட துறைக்கு தகவல் தெரிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊரடங்கு கால கட்டத்தில் ஒவ்வொரு காவல்துறையினரும் கண்டிப்பாக அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொண்டு, தங்கள் உடல் நலனில் மிகுந்த கவனம் கொண்டு, சிறப்பான முறையில் பணியாற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று டிஜிபி திரிபாதி அளித்துள்ள அறிவுரைகளில் தெரிவித்துள்ளார். 

செய்தியாளர் சுப்ரமணியன்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com