தருமபுரியில் உள்ள பெட்ரோல் பங்கில் வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கப்பட்ட பெட்ரோலில் தண்ணீர் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தடங்கம் பகுதியில் செயல்படும் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பெட்ரோல் பங்கில் வாடிக்கையாளர் ஒருவர் குடிநீர் கேனில் பெட்ரோல் வாங்கியுள்ளார். பெட்ரோலில் 80 சதவிகித அளவுக்கு தண்ணீர் கலந்து இருந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். இதையறிந்து அதிர்ந்துபோன மற்ற வாடிக்கையாளர்களும் பெட்ரோல் பங்க் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தகவலறிந்து சென்ற காவல்துறையினர் மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையில், பெட்ரோல் பங்க் தற்காலிகமாக மூடப்பட்டது. அண்மையில் பெய்த மழைநீர் பெட்ரோல் சேமிப்பு கிடங்கில் கலந்திருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ள பங்க் உரிமையாளர், இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகளின் ஆய்வுக்கு பின்னரே பெட்ரோல் பங்க் திறக்கப்படும் என தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பெட்ரோலில் தண்ணீர் கலந்து வந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.