காவல் வாகனத்திற்கு தீ வைத்த மக்கள்! அறிவுறுத்திய காவல்துறை
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து தூத்துக்குடியில் காவல்துறை வாகனத்திற்கு இன்று தீ வைத்ததையடுத்து காவல்துறை பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தியது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம் செய்யக் கூடாது, ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் அப்பகுதி மக்களால் நடைபெற்ற போராட்டம் 100 ஆவது நாளை எட்டியது. ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிடச்சென்ற மக்களுக்கும் காவல்துறையினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு வன்முறை வெடித்தது. கலவரத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அந்த துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் 25ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட நிர்வாகம். பதட்டமான சூழல் நிலவிவரும் நிலையில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் உடலுக்கு பிரேத பரிசோதனை நடத்த எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் போராட்டம் வெடித்தது. போராட்டக்காரர்களை அடக்க கண்ணீர் புகை எறிந்தும், தடியடி நடத்தியும் மக்களை விரட்டியடித்தனர். காவல்துறையின் இந்த செயலை கண்டித்து வீதியில் இருந்த காவல்துறையின் வாகனம் போராட்டக்காரர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டது.
பதட்டமான சூழல் நிலவிவரும் நிலையில், தூத்துக்குடியில் அமைதி நிலவ பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்து அமைதி காக்க வேண்டும். தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்திற்கும், காவல்துறைக்கும் ஒத்துழைப்பு தரவேண்டும். வன்முறை தூண்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்களுக்கு காவல்துறை ஒலிபெருக்கு மூலம் அறிவுறுத்தியுள்ளனர்.