ஈரோட்டில் அடிப்படை வசதி கோரி மக்கள் அரை நிர்வாணப் போராட்டம்
ஈரோடு மாவட்டம் பொலவாக்காளிபாளையத்தைச் சேர்ந்த மக்கள் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி வாயில் கருப்புத் துணி கட்டி அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை அடுத்த பொலவக்காளிபாளையத்திலுள்ள இந்திரா நகர் பகுதியில் தெருவிளக்கு, சாக்கடை மற்றும் குடிநீர் வசதி கேட்டு கோபி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மனு கொடுக்க வரும் பொதுமக்களை அலட்சியப்படுத்துவதாக அவர்கள் தெரிவித்தனர். சுமார் 300 குடும்பங்கள் வசித்து வரும் தங்கள் பகுதியில் கழிவு நீர் வசதி, குடிநீர் வசதி, தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதியுறுவதாகக் கூறி, வாயில் கருப்புத் துணி கட்டி அரை நிர்வாணப் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர்
ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பொலவக்காளிபாளையம் சிற்றூராட்சிக்குட்பட்ட இந்திரா நகர் தலித் குடியிருப்பு பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட வீடுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்துவருகின்றனர். அவர்கள் குடியிருப்பு பகுதியில் மொத்தம் 20க்கும் மேற்பட்ட வீதிகள் உள்ளதாகவும் அனைத்து மக்களுக்கும் தேவையான அளவு குடிநீர் விநியோகம் செய்யபடுவதில்லை. அனைத்து வீதிகளிலும் சாக்கடை வசதிகள் இருந்தும் பாராமரிப்பு பணிகள் செய்வதில்லை என குற்றம்சாட்டுகின்றனர். அதனால் சாக்கடை கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் உற்பத்தியாகி குழந்தைகள் உட்பட அனைத்து வயதினருக்கும் பல்வேறு விதங்களில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு வருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். சாக்கடையில் சுவர்கள் பழுது ஏற்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து கோபி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் வருத்தத்துடன் கூறுகிறார்கள் அப்பகுதி மக்கள்.
இந்த பிரச்னைகளை முன்வைத்து இந்திராநகர் குடியிருப்பு பகுதியைச்சேர்ந்த இளைஞர்கள் மற்றும் தமிழ்நாடு ஒடுக்கபட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். கோபிச்செட்டிபாளையம் சார் ஆட்சியர் அலுவலகத்திலிருந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வாயில் கருப்புத்துணி கட்டிக்கொண்டு அரை நிர்வாணமாக கோஷங்கள் எழுப்பியபடி ஊர்வலமாக சென்று வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்தனர். மேலும் இந்திரா நகர் குடியிருப்பு பகுதி பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துகொடுக்க வேண்டும். தவறினால் பல்வேறு போராட்டங்களில் ஈடுபடப்போவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர். பரபரப்பாக உள்ள கச்சேரிமேடு பகுதியில் தமிழ்நாடு ஒடுக்கபட்டோர் வாழ்வுரிமை இயகத்தினர் வாயில் கருப்புத்துணி கட்டிக்கொண்டு அரை நிர்வாணத்துடன் போராட்டதில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.