“குழந்தைகளை நாங்களே வளர்த்திருப்போம்” - கதறி அழுத அபிராமி வீட்டு உரிமையாளர்..!

“குழந்தைகளை நாங்களே வளர்த்திருப்போம்” - கதறி அழுத அபிராமி வீட்டு உரிமையாளர்..!

“குழந்தைகளை நாங்களே வளர்த்திருப்போம்” - கதறி அழுத அபிராமி வீட்டு உரிமையாளர்..!
Published on

தகாத உறவு காரணமாக தனது இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் என அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

சென்னை அருகேயுள்ள குன்றத்தூர் அடுத்த மூன்றாம் கட்டளையைச் சேர்ந்தவர் விஜய். இவரது மனைவி அபிராமி. இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். இந்தத் தம்பதிக்கு 7 வயதில் அஜய் என்ற மகனும், 4 வயதில் கார்னிகா என்ற மகளும் இருந்தனர். விஜய் தனியார் வங்கி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி தனது பிறந்தநாளை குடும்பத்தினருடன் கொண்டாடிவிட்டு விஜய் பணிக்குச் சென்றுவிட்டார். வேலைப்பளு காரணமாக அன்றிரவு விஜய்யால் வீட்டுக்கு வரமுடியவில்லை எனக் கூறப்படுகிறது. அடுத்த நாள் காலை விஜய் வீட்டுக்கு வந்து பார்த்த போது அபிராமியை காணவில்லை. இரண்டு குழந்தைகளும் வாயில் நுரை தள்ளிய நிலையில் உயிரிழந்து கிடந்தனர். அதிர்ச்சியில் உறைந்த விஜய், பின்னர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

அவர்கள் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் தெரியவந்தன. குன்றத்தூரில் பிரியாணிக் கடை ஒன்றில் பணியாற்றும் சுந்தரம் என்பவருக்கும், அபிராமிக்கும் இடையே தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இதனையறிந்த விஜய் அபிராமியை கண்டித்துள்ளார். ஆனால் அவர் கேட்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதன்காரணமாக இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தனது தகாத உறவுக்கு இடையூறாக இருக்கும் கணவன் மற்றும் குழந்தைகளை கொலை செய்ய அபிராமி முயன்றதாக தெரிகிறது.

பெற்ற குழந்தைகளை கொன்ற தாய்

கடந்த 30-ஆம் தேதி கணவன் விஜய் மற்றும் இரண்டு குழந்தைகளுக்கும் பாலில் தூக்க மாத்திரை கலந்து அபிராமி கொடுத்ததாக கூறப்படுகிறது. அதில் அவரது மகள் மட்டும் இறந்துள்ளார். இதனையடுத்தே 31-ஆம் தேதி கணவர் வேலைக்குச் சென்றவுடன் மகனுக்கு பாலில் விஷத்தை கலந்து கொடுத்து அபிராமி கொலை செய்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

அதன்பின்னர் தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு குன்றத்தூரில் உள்ள நகைக்கடை ஒன்றுக்கு அபிராமி சென்றதாக கூறப்படுகிறது. அங்கு தனது நகையை விற்று பணம் பெற்றுக்கொண்ட பின்னர் கோயம்பேடு பேருந்து நிலையத்துக்குச் சென்றுள்ளார். அங்குள்ள சிசிடிவி காட்சிகளில் அபிராமி இருசக்கர வாகனத்தில் வருவது பதிவாகி உள்ளது. வண்டியை நிறுத்திவிட்டு அங்கிருந்து பேருந்து மூலம் அபிராமி திருவனந்தபுரம் சென்றதாக தெரிகிறது‌.

இந்த நிலையில் அபிராமியுடன் தகாத உறவு வைத்திருந்ததாக கூறப்படும் சுந்தரத்தை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அவரையும், அபிராமியின் சகோதரரையும் அழைத்துக்கொண்டு நாகர்கோவில் சென்ற காவல்துறையினர், சுந்தரத்தை விட்டு அபிராமியிடம் பேச வைத்தனர். காவல்துறையினர் யோசனைப்படி தன்னைக் காண நாகர்கோவில் வரும்படி அபிராமியை அழைத்தார் சுந்த‌ரம். அதனை நம்பி நாகர்கோவில் வந்த அபிராமி கைது செய்யப்பட்டார்.

தகாத உறவு விவகாரத்தில் பெற்ற குழந்தைகளையே கொன்ற அபிராமிக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டனர். இதனிடையே அபிராமிக்கு தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் என அபிராமி வீட்டின் அருகே வசித்த பலரும் தங்களது கருத்தினை தெரிவித்துள்ளனர். ஒருவர் கூறும்போது, “ இந்த பிஞ்சு குழந்தைகளை கொல்ல எப்படித்தான் மனசு வந்ததோ.. குழந்தைகள் இல்லாமல் எத்தனையோ பேர் நாளுக்கு நாள் வேதனைப்படுகின்றனர். ஆனால் தகாத உறவு விவகாரத்தால் பெற்ற குழந்தை என்றும் பாராமல் குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு தூக்குத் தண்டனை வழங்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

அபிராமி தம்பதியினர் வாடகை வீட்டில்தான் வசித்து வந்தனர். வீட்டின் உரிமையாளர் கூறும்போது, “ விஜய் ரொம்ப நல்ல மனிதன். இருக்கும் இடம் தெரியாது. அவ்வளவு அமைதியானவர். வீட்டு வாடகையை கூட மூன்று மாதத்திற்கு ஒருமுறைதான் கொடுப்பார். நாங்கள் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவே மாட்டோம். எங்க வீட்டு பிள்ளையாகதான் அவரை நாங்கள் பார்த்தோம். அபிராமிதான் அடிக்கடி பைக்கில் வெளியே கிளம்புவாள். அப்போதெல்லாம் குழந்தைகள் எங்களிடமே இருக்கும். எங்களை அத்தை- மாமா என அழைத்தே சுற்றிச்சுற்றி வரும். குழந்தைகள் இல்லாத வீட்டை இப்போது காணவே முடியவில்லை. குழந்தைகளை எங்களிடமாவது கொடுத்திருக்கலாம். நாங்களாவது வளர்த்திருப்போம்” என்று தலையில் அடித்துக் கொண்டபடி கதறினார். 

வீட்டின் உரிமையாளரான இந்தத் தம்பதி அபிராமி குடும்பத்துடன் அவ்வளவு நெருக்கமாக வாழ்ந்துள்ளனர். அவர்களுக்கே தெரியாமல் ரகசியமான உறவை மேற்கொண்டிருக்கிறார் அபிராமி. இவரின் செய்கையால் அந்தப் பகுதியில் உள்ள மக்கள் மனம் உடைந்து போய் இருக்கிறார்கள். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com