சொந்த தொகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தராத அமைச்சர் செல்லூர் கே.ராஜுவை கண்டித்து தெர்மாகோலுடன் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை பரவை பேரூராட்சி பகுதியில் கழிவுநீர் செல்வதற்கு வசதி இல்லாததால் தொற்று நோய்கள் பரவுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இது தொடர்பாக தங்கள் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், அமைச்சருமான செல்லூர் கே.ராஜுவிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமானோர் கைகளில் தெர்மாகோல் ஏந்தி நூதன முறையில் அமைச்சருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
மதுரை பரவை பேரூராட்சிக்கு உட்பட்ட 10வது வார்டு அண்ணாநகர் பகுதியில் தனியார் அடுக்கு மாடி வீடுகள் கட்டுவதற்காக கழிவுநீர் சாக்கடையை பள்ளத்தில் இருந்து மேட்டுப் பகுதிக்கு திருப்பி விடுவதாகவும், இதனால் காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவுவதாகவும் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான அமைச்சர் செல்லூர் கே.ராஜுவிடம் புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அம்மக்கள் கூறினர். காவல்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து கோரிக்கை மனுவினை அளித்து சென்றனர்.