\
‘குடித்துவிட்டு பள்ளி வளாகத்திலே பாட்டில்களை உடைக்கிறார்கள்’ - ‘குடி’மகன்கள் மீது புகார்

‘குடித்துவிட்டு பள்ளி வளாகத்திலே பாட்டில்களை உடைக்கிறார்கள்’ - ‘குடி’மகன்கள் மீது புகார்

‘குடித்துவிட்டு பள்ளி வளாகத்திலே பாட்டில்களை உடைக்கிறார்கள்’ - ‘குடி’மகன்கள் மீது புகார்
Published on

அரசுப்பள்ளி அருகே இருக்கும் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாணவ மாணவிகளின் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே எதுமலை ஊராட்சியில் அரசு உயர் நிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு சுமார் 100 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளிக்கு அருகிலேயே அரசு மதுபானக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. 

இந்நிலையில் கடந்த சனி, ஞாயிறு பள்ளி விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த பள்ளிக்கு சுற்று சுவர் இல்லாமல் திறந்த வெளியில் இருப்பதால் சில விஷமிகள் குடித்துவிட்டு மதுபாட்டில்களை வகுப்பறை முன்பு சுக்கு நூறாக் உடைத்தெறிந்துள்ளனர். இதனால் மாணவ, மாணவிகள் வகுப்பறைக்குள் செல்ல முடியாத நிலை நிலவியது. 

இதையறிந்த பெற்றோர், பள்ளியை முற்றுகையிட்டு பள்ளி அருகில் உள்ள அரசு மதுபான கடையை உடனே அகற்ற வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். தகவலறிந்த சம்பவ இடத்திற்கு வந்த சிறுகனூர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். 

இது குறித்து அப்பகுதிவாசி கூறுகையில், “விடுமுறை நாட்கள் மட்டுமில்லாமல் தினசரி இந்த பள்ளியில் மது குடித்துவிட்டு பாட்டில்களை உடைப்பது வாடிக்கையாகிவிட்டது. இந்த மதுக்கடையை அகற்ற வேண்டும். இதனால் இந்த பள்ளி மாணவ மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்படுகிறது” எனத் தெரிவித்தார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com