கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் நடவடிக்கை எடுக்க மறுத்த காவல் ஆய்வாளர்? உறவினர் போராட்டம்
கல்லூரி மாணவியை தற்கொலைக்கு தூண்டியவர்வர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என காவல் ஆய்வாளர் கூறியதாக உறவினர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே நெய்குப்பை கிராமத்தில் வசிப்பவர் குமார். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் ஆர்த்தி (20). சமயபுரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பையோ மெடிக்கல் இறுதி ஆண்டு படித்து வந்தார்.
இவர்கள் வீட்டின் அருகே குடியிருப்பவர்கள் சுந்தர்- சுதா தம்பதிகள். இவர்களுக்கு 4 வயதில் குழந்தை உள்ளது. ஏற்கெனவே குமார் குடும்பத்திற்கும் சுந்தர் குடும்பத்திற்கும் முன்பகை இருந்து வரும் நிலையில், ஆர்த்தி கடந்த 2 ம் தேதி சுந்தரின் குழந்தையை தூக்கி கொஞ்சியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுந்தர் மனைவி சுதா ஆர்த்தியை தகாத வார்த்தையில் திட்டியதாக தெரிகிறது.
மேலும் சுதாவின் உறவினர்கள் மலர்கொடி, சாந்தி , கலியசுந்தரம் உள்ளிட்ட 5 பேர் கடுமையாக திட்டியதாகக் கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த ஆர்த்தி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடனே அவர் மீட்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சைப்பலனின்றி ஆர்த்தி நேற்று இரவு உயிரிழந்தார்.
இதையடுத்து மாணவியின் தாய் செல்வம், தனது மகளை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார். அதற்கு சமயபுரம் காவல்நிலைய ஆய்வாளர் அன்பழகன் நடவடிக்கை எடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து மாணவியின் தாய் கூறுகையில், “கொரோனா காலத்தில் புகார் மீது நடவடிக்கை எடுக்க மாட்டோம். நீ அவனை அரிவாளால் வெட்டினாலோ அல்லது அவன் உன்னை வெட்டினாலோ நடவடிக்கை எடுக்க மாட்டோம் என ஏளனமாக பேசினார். எனவே காவல் ஆய்வாளர் அன்பழகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.” எனத் தெரிவித்தார். இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த லால்குடி காவல்துறையினர் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல் ஆய்வாளர் மீது உரிய விசாரணை நடத்தப்படும் எனவும் கூறியதால் போராட்டம் கைவிடப்பட்டது.