தஞ்சை மாவட்டத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்தினர் பதித்து வைத்திருந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் கசிந்ததால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
கும்பகோணம் அருகே உள்ள கதிராமங்கலத்திலிருந்து மயிலாடுதுறைக்கு குழாய்கள் மூலம் கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக ஓஎன்ஜிசி நிறுவனம் சார்பில் பூமிக்கு அடியில் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கதிராமங்கலத்தில் உள்ள வெள்ளைப்பிள்ளையார் கோயில் அருகே குழாய் பதிக்கப்பட்டிருந்த இடத்தில் கச்சா எண்ணெய் கசிந்ததைக் கண்ட மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்த தகவலின்பேரில் அங்கு வந்த ஓஎன்ஜிசி அதிகாரிகள், எண்ணெய்க் கசிவை சீரமைத்தனர். பூமிக்கடியில் இருக்கும் குழாயில் மண் அரிப்பினால் துளை விழுந்து கச்சா எண்ணெய் கசிந்ததாக கூறப்படுகிறது. கதிராமங்கலத்தில் கடந்த ஆண்டும் இதேபோல கச்சா எண்ணெய் கசிவு ஏற்பட்டதால், மக்கள் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.