"மக்கள் தாராளமாக நிவாரண நிதி வழங்கலாம்" - முதல்வர் பழனிசாமி !
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு தமிழக மக்கள் தங்களின் பங்களிப்பை வழங்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், தொழில் அதிபர்கள், முன்னணி தனியார் நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள், நன்கொடையாளர்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்பை தமிழக அரசு நாடுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா நிவாரண தொகையை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வங்கி இணையச் சேவை, கடன் அட்டை, பற்று அட்டையின் வழியாக இணையதளம் மூலம் செலுத்தி ரசீதினை பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ECS மூலமாக நிதி செலுத்த விரும்புவோர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தலைமைச் செயலக கிளைக்கு நேரடியாக அனுப்பலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ECS மூலம் நிதி அனுப்புவோர் உரிய அலுவலகப் பற்றுச்சீட்டினை பெறப் பெயர், செலுத்தும் தொகை, வங்கி, அதன் கிளை உள்ளிட்டவற்றை குறிப்பிட வேண்டும். வெளிநாடு வாழ் மக்கள் Swift Code-ஐ பின்பற்றி பணம் அனுப்பலாம் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மின்னணு மூலம் பரிவர்த்தனை செய்ய இயலாதவர்கள் காசோலை அல்லது வங்கி வரைவோலை மூலமாக தலைமைச் செயலக முகவரிக்கு அனுப்பலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்கொடைகளுக்கு வருமான வரிச்சட்டம் பிரிவு 80இன் கீழ் 100 சதவீத வரிவிலக்கு உண்டு எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.