காரில் சென்றவர் ஹெல்மெட் அணியவில்லை என அபராதம்...54 முறை வந்த வார்னிங் மெசேஜால் அதிர்ச்சி!

காரில் சென்றவர் ஹெல்மெட் அணியவில்லை என அபராதம்...54 முறை வந்த வார்னிங் மெசேஜால் அதிர்ச்சி!

காரில் சென்றவர் ஹெல்மெட் அணியவில்லை என அபராதம்...54 முறை வந்த வார்னிங் மெசேஜால் அதிர்ச்சி!

சென்னையில் காரில் சென்ற நபருக்கு ஹெல்மெட் அணியவில்லை என 54 முறை அபராத செலான் அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. போக்குவரத்து போலீசார் அலட்சியத்தால் வாகன ஓட்டிகள் அவதியில் உள்ளனர். இதேபோன்று பலருக்கும் குறுஞ்செய்தி சென்றிருக்கலாம் என்று தெரிய வருகிறது.

சென்னை அடையாறு பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய் குமார். இவர் (நாராயணா இன்ஸ்டியூட்) தனியார் பயிற்சி நிறுவனத்தில் மென்பொருள் நிறுவனங்களுக்கு பணிக்குச் செல்பவர்களுக்கு பயிற்சி அளிக்கும் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

சஞ்சய் குமார் கடந்த மாதம் புதிய கார் (Hundai Creta) ஒன்றை வாங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் 26 ஆம் தேதி இவருக்கு போக்குவரத்து காவல்துறை சார்பாக அனுப்பப்பட்ட குறுஞ்செய்தியில் வேப்பேரி பகுதி வழியாக கடந்த மாதம் 19 ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் பின்னால் அமர்ந்து சென்றதாக அவருக்கு 100 ரூபாய் அபராதம் செலுத்தக்கூறி வந்திருந்தது. பின்னர் அடுத்த சில வினாடிகளில் அதே விதிமீறலுக்காக அடுத்தடுத்து 54 தனித்தனிச் செலான்கள் வாயிலாக தலைக்கவசம் அணியாமல் சென்றதாகக் கூறி ஒவ்வொன்றிலும் 100 ரூபாய் அபராதம் செலுத்தக்கூறி குறுஞ்செய்தி வந்துள்ளது.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கார் உரிமையாளர் சஞ்சய் குமார் சென்னை காவல்துறையின் இணையதள முகவரிக்கு இது தொடர்பாக அந்த வாகன பதிவு எண், இருசக்கர வாகனத்தின் எண் இல்லை எனவும், காரின் பதிவு எண்ணை வைத்து தவறாக வழக்கு போடப்பட்டுள்ளதாகவும் தனது தரப்பு விளக்கத்தை புகாராக அளித்து உரிய நடவடிக்கை வேண்டியுள்ளார்.

இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இச்சம்பவம் தொடர்பாக பொதுமக்களில் ஒருவராக பாதிக்கப்பட்ட சஞ்சய்குமாரே போக்குவரத்து காவல்துறையை தொடர்புகொண்டு விளக்கம் கேட்டப்போது, 54 முறை ஒரே குற்றத்திற்காக வழக்கு பதியப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நடந்த தவறு என அலட்சியமாக பதிலளித்ததுடன், அதை சரிசெய்ய adctraffic@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தவறுதலாக அனுப்பப்பட்ட செலான்களை இணைத்து, பரிந்துரை கடிதம் அனுப்பினால் 20 நாட்கள் கழித்து பரிசீலிக்கப்பட்டபின் தவறுதலாக மீண்டும் மீண்டும் போடப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.

அதேபோல காரின் பதிவு எண்ணை வைத்து இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்றவர் தலைக்கவசம் அணியாமல் சென்றதாக எப்படி வழக்கு போட்டுள்ளீர்கள் என்று விளக்கம் கேட்டபோது, இது Manual முறையில் பதியப்பட்ட வழக்கு இல்லை எனவும், சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதை சரிசெய்ய காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள போக்குவரத்து துறையின் அலுவலகத்தை அணுகி கார் பதிவு எண் தொடர்பான விவரங்களுடன் மனு அளித்து வழக்கை ரத்து செய்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கின்றனர்.

காரின் பதிவு எண்ணை வைத்து காரின் உரிமையாளருக்கு இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்றபோது தலைக்கவசம் அணியவில்லை என 54 முறை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதேபோன்று தவறுதலாக ஏராளமானோருக்கு குறுஞ்செய்தி சென்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நடந்த தவறு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக என்றாலும் போக்குவரத்து காவல்துறையின் தரப்பில் நடந்த தவறுக்கு பொதமக்களை அலைக்கழித்து 20 நாட்கள் காத்திருக்க வைப்பது எப்படி நியாயமாகும் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com