அதிக வலியால் துடிக்கும் நோயாளிகளுக்கு சிறப்பு வலிநிவாரணி மையம் தேவை! - நீதிமன்றத்தில் மனு

அதிக வலியால் துடிக்கும் நோயாளிகளுக்கு சிறப்பு வலிநிவாரணி மையம் தேவை! - நீதிமன்றத்தில் மனு
அதிக வலியால் துடிக்கும் நோயாளிகளுக்கு சிறப்பு வலிநிவாரணி மையம் தேவை! - நீதிமன்றத்தில் மனு

புற்றுநோய், HIV மற்றும் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இறக்கும் தருவாயில் அதிகமான வலிகள் ஏற்படாத வண்ணம் அரசு மருத்துவமனைகளிலும் சிறப்பு வலி நிவாரணி மையங்கள் அமைக்க கோரிய வழக்கில், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலர், மருத்துவக் கல்வியல் துறை இயக்குனர் ஆகியோர் பதிலளிக்க மதுரைக்கிளை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த சகா என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "2021-ல் எனது சகோதரர் முத்துக்குமார் என்பவர், நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் கட்டிட வேலையில் ஈடுபடும் பொழுது காலில் காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது பல்வேறு சிகிச்சை மேற்கொண்டும், அவரை காப்பாற்ற முடியாது என மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர். இந்த நிலையில் தொடர் சிகிச்சையில் இருந்த அவர், மரணமடையும் இறுதிநேர காலங்களில் காலில் தாங்கமுடியாத மிகுந்த வலி ஏற்பட்டதாக கூறி மரணம் அடைந்தார்”.

இதுபோன்று புற்றுநோய், HIV மற்றும் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இறக்கும் தருவாயில் அதிகமான வலிகளை அனுபவித்து மரணம் அடைகின்றனர். புற்றுநோய், HIV மற்றும் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இறக்கும் தருவாயில் அதிகமான வலிகள் ஏற்படாத வண்ணம் பல தனியார் மருத்துவமனைகளில் வலி நிவாரணி சிறப்பு மையங்கள் மற்றும் வலி நிவாரணி மருந்துகள் ஆகியவை உள்ளன. இதை போல் வலி நிவாரணி சிறப்பு மையங்களை அரசு மருத்துவமனையில் ஏற்படுத்த வேண்டும். இதற்கு தேவையான வலி நிவாரணி மருந்துகளும், பணியாளர்களையும் தேர்வு செய்ய வேண்டும்.

குறிப்பாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை, மதுரை தோப்பூர் அரசு நுரையீரல் மருத்துவமணை, பாலரங்காபுரம் அரசு மருத்துவமனை, திருச்சி அரசு மருத்துவமனை, தஞ்சாவூர் அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் வலி நிவாரணி சிறப்பு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல மனுக்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

எனவே, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை, மதுரை தோப்பூர் அரசு நுரையீரல் மருத்துவமணை, பாலரங்காபுரம் அரசு மருத்துவமனை, திருச்சி அரசு மருத்துவமனை, தஞ்சாவூர் அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் புற்றுநோய், HIV மற்றும் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வலி நிவாரணி சிறப்பு மையம் அமைக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று இந்த மனு மதுரைக்கிளை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது, மனுவை பரிசீலித்த நீதிபதிகள் வழக்கு குறித்து சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலர், மருத்துவக் கல்வியல் துறை இயக்குனர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com