தேர்தல் ஆணையத்தின் அனைத்து கட்சிக் கூட்டம் - அதிமுக, திமுக உள்ளிட்டவை பங்கேற்பு
மக்களவைத் தேர்தலுக்கு தமிழகத்திலுள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில், அனைத்து கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்துகின்றது.
மக்களவைத் தேர்தல் தொடர்பாக, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தலைமையில் சென்னையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்று வருகிறது. தலைமைச் செயலகத்தில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நண்பகல் 12 மணிக்கு இந்தக் கூட்டம் தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க தமிழகத்தில் உள்ள அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்திருந்தது.
அதன்படி, அதிமுக, திமுக, தேமுதிக, பாஜக, காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட 10 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். இந்தக் கூட்டத்தில் நாளையும், நாளை மறுதினமும் நடைபெறும் சிறப்பு வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கம் குறித்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டு வருகிறது. அத்துடன் தேர்தல் நேரத்தில் கொடுக்க வேண்டிய ஒத்துழைப்புகள் குறித்தும் கட்சிகளுடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.