இளம்பெண்கள் வீட்டைவிட்டு வெளியேற காரணம் பெற்றோர்களே... நீதிபதிகள் வேதனை

இளம்பெண்கள் வீட்டைவிட்டு வெளியேற காரணம் பெற்றோர்களே... நீதிபதிகள் வேதனை
இளம்பெண்கள் வீட்டைவிட்டு வெளியேற காரணம் பெற்றோர்களே... நீதிபதிகள் வேதனை

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளோடு நேரத்தை செலவிடாததே, இளம்பெண்கள் பிறரின் ஆசை வார்த்தைகளை நம்பி வீட்டை விட்டு வெளியேறுவதற்கு காரணமாக அமைவதாக சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

காணாமல்போன 10-ம் வகுப்பு மாணவியை மீட்டுத் தரக்கோரி, அவரது தாய் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பெற்றோர் சம்மதம் இல்லாமல் வீட்டை விட்டு வெளியேறும் இளம்பெண்கள் திருமணமானவர்களை மணந்து கொண்டது தொடர்பாக இதுவரை எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? திருமணமானதை மறைத்து இளம்பெண்களை ஏமாற்றிய எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்? என கேள்வி எழுப்பியது. இதுதொடர்பாக பதிலளிக்கும்படி அரசு தரப்புக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஏற்கெனவே திருமணமான நபர்களின் சுயரூபம் மற்றும் உண்மை விபரம் தெரியாமல் இளம்பெண்கள், வீட்டை விட்டு வெளியேறுவது குறித்து நீதிபதிகள் கவலை தெரிவித்தனர்.

கடந்த 10 ஆண்டுகளில் இளம்பெண்கள் வீட்டை விட்டு சென்றதாக 53,898 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக காவல்துறையின் அறிக்கையை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், பெற்றோர்கள் தங்கள், குழந்தைகளோடு நேரத்தை செலவிடாததும், அவர்களுக்கு உரிய அன்பும் பரிவும் கிடைக்கபெறாததே இது போன்ற நிகழ்வுகளுக்கு காரணமாக அமைவதாக நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

வழக்கின் முக்கியத்துவம் கருதி இந்த விவாகரத்தில் மத்திய சமூக நலத்துறையை தாமாக முன்வந்து பதில் மனுதாரராக இணைத்த நீதிபதிகள், இது போன்ற நிகழ்வுகளை தடுக்க மத்திய - மாநில அரசுகள் எடுத்துள்ள நடவடிக்கை குறித்து விளக்கமளிக்கும்படி உத்தரவிட்டு, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com