
மதுரையில் பிற்கால பாண்டியர் கால கல்வெட்டு ஒன்று வரலாற்று ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது.
மதுரை திருவாதவூர் அருகே உள்ள இடையபட்டி கிராமத்தில் மழைநீர் கால்வாய் அருகே பழமையான கல்வெட்டு இருப்பதாக அப்பகுதியை சேர்ந்த சிலர் கொடுத்த தகவலின் பேரில் கோவில் கட்டடக்கலை ஆய்வாளர் தேவி மற்றும் குழுவினர் அந்தக்கல்வெட்டை படியெடுத்து ஆய்வு செய்தனர்.
அந்த ஆய்வில் அந்தக்கல்வெட்டு மாறவர்மன் குலசேகர பாண்டியனின், 43ம் ஆண்டு ஆட்சி கால கல்வெட்டு என தெரிய வந்தது. பிற்கால பாண்டிய மன்னராக இருந்த மாறவர்மன் குலசேகர பாண்டியன் ஆட்சிக்காலம் குறித்த தகவல்களுடன் இந்தக்கல்வெட்டு இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
1268 ஆம் ஆண்டில் ஆட்சி செய்த இந்த பாண்டிய மன்னனை திருப்புவனம் உடைய நாயனார் கோவில் வீரா சிங்க ராயன் எனக்குறிப்பிட்டு இந்தக்கல்வெட்டு உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். திருப்புவனம் பகுதியில் சிவாலயங்களை நிர்மானித்தல் அல்லது கோவில் கட்டி சைவத்தை பரப்பியதால் இப்பெயர் கொடுக்கப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. மேலும் இந்தக்கல்வெட்டு 1311ம் ஆண்டு பொறிக்கப்பட்டதாகவும், முழுக்கல்வெட்டில் பாதி மட்டுமே இங்கு இருப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.