யாரும் முன்வரவில்லை: கொரோனாவால் உயிரிழந்த பெண்ணின் உடலை அடக்கம் செய்த ஊராட்சிமன்ற தலைவர்!
பொன்னேரி அருகே கொரோனாவால் உயிரிழந்த பெண்ணின் சடலத்தை அடக்கம் செய்ய யாரும் முன்வராத நிலையில் ஊராட்சி மன்ற நிர்வாகத்தினர் பாதுகாப்பு கவச உடையுடன் களத்தில் இறங்கிய குழுவினருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம் ஊராட்சியை சேர்ந்த 45 வயது பெண் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது சடலம் ஆம்புலன்ஸ் மூலம் திருவேங்கடபுரம் சுடுகாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. சடலத்தை அடக்கம் செய்வதற்காக ஜேசிபி இயந்திரம் கொண்டு 10அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டது.
கொரோனாவால் இறந்தவரின் சடலம் என்பதால் இறுதி சடங்கு செய்யும் ஊழியர்கள் சுடுகாட்டிற்கு வந்து பணிகளை மேற்கொள்ள தயக்கம் காட்டினர். இதனையடுத்து தடப்பெரும்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பாபு, வார்டு உறுப்பினர் பாலாஜி, முன்னாள் வார்டு உறுப்பினர் பிரேம்குமார், சமூக ஆர்வலர் ஆகியோர் பாதுகாப்பு கவச உடையை அணிந்து களத்தில் இறங்கினர்.
ஆம்புலன்ஸில் இருந்து கொரோனாவால் இறந்த பெண்ணின் சடலத்தை இறக்கி கயிறு கட்டி குழியில் வைத்து அடக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். கொரோனாவால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய அரசு வழங்கிய நெறிமுறைகளை கடைபிடித்து அடக்கம் செய்யப்பட்டது. ஊழியர்கள் அடக்கம் செய்யும் பணியில் ஈடுபட தயக்கம் காட்டிய நிலையில் ஊராட்சி மன்ற தலைவரும், வார்டு உறுப்பினர் மற்றும் தன்னார்வலர்கள் களத்தில் இறங்கிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவி பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறது.