தூர்ந்து போன பழவேற்காடு முகத்துவாரம்.. கிராம மக்கள் எடுத்த முடிவு.. தீர்வு கிடைத்ததா?
இந்தியாவின் மிக நீண்ட உப்பு நீர் ஏரியான சில்கா ஏரிக்கு அடுத்த படியாக விளங்குவது திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு ஏரி. பழவேற்காடு முதல் ஆரம்பாக்கம், ஆந்திராவின் தடா உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய இந்த ஏரியை நம்பி, இரண்டு லட்சம் மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை நகர்த்தி வருகின்றனர். இங்கும் வசிக்கும் மீனவர்கள், பழவேற்காடு ஏரியில் இருந்து முகத்துவாரம் வழியாக கடலுக்குச் சென்று மீன் பிடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
ஆனால், பழவேற்காடு ஏரியும் கடலும் சங்கமிக்கக் கூடிய இந்த முகத்துவாரம் பகுதி முழுவதுமாக தூர்ந்து போனது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை இல்லாததால், சொந்த செலவில் தாங்களே ஒன்றுகூடி முகத்துவாரத்தை தூர்வாரினர். எனினும், இந்த முயற்சி பலனில்லாமல் போனதால் வேதனையில் உள்ளனர் மீனவ மக்கள். கடந்த ஆட்சியில் 27 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது குறித்து ஆட்சியரிடம் முறையிட்ட பிறகு, நிரந்தர முகத்துவாரம் அமைக்க பூஜையும் போடப்பட்டதாகவும், ஆனால் இதுவரை அதற்கான பணிகள் தொடங்கப்படவே இல்லை என்றும் குமுறுகின்றனர்.
இந்த சூழ்நிலையில் கடன் பெற்று மேற்கொண்ட பணிகளுக்கான, உரிய நிதியை அளிக்க வேண்டும் என்றும், தங்களின் வாழ்வாதாராமாக விளங்கும் மீனவ தொழிலுக்கு உரிய வழி கிடைக்க செய்வதுடன், உடனடி நிரந்தர தீர்வுகாண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்துகின்றனர். தாங்களே தங்களின் தொழிலை காக்க பல முயற்சிகள் மேற்கொண்டாலும், தோல்வியிலேயே முடிவதால் மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ளனர் மீனவ மக்கள்.