அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் திருவிழா மற்றும் விசேஷ காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பக்தர்கள் சிலர் செல்போன் மூலம் முருகன் கருவறையை படம் எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி வந்தனர். இதையடுத்து சில நாட்களுக்கு முன் உயர்நீதிமன்ற மதுரை கிளை பழனி கோயிலில் செல்போன் பயன்படுத்த தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் இன்று தொடர் விடுமுறை காரணமாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனி கோயிலில் குவிந்தனர். பக்தர்கள் பலர் செல்போனை மலை கோவிலுக்கு கொண்டு வந்திருந்தனர். இதைக் கண்ட கோவில் ஊழியர்கள் செல்போன்களை வாங்கி ஒவ்வொரு செல்போனுக்கு பக்தர்களிடம் 500 ரூபாய் அபராதம் விதித்தனர். அபராதம் கட்டவில்லை என்றால் செல்போனை உண்டியலில் போட்டு விடுவோம் என கோயில் ஊழியர்கள் கூறியாக தெரிகிறது.
இதைத் தொடர்ந்து பணம் இல்லாத பக்தர்கள் சிலர் உடன் வந்த உறவினர்களிடம் பணத்தை வாங்கிக் கொடுத்து செல்போனை மீட்டுச் சென்றனர். இதற்கு நீண்ட நேரம் வரிசையில் பக்தர்கள் காத்திருந்து நிலையில், எதிர்ப்பு தெரிவித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இது குறித்து கோயில் நிர்வாகம் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், பழனி முருகன் கோயிலுக்கு செல்போன் கொண்டுவர உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், கோயில் நிர்வாகம் சார்பிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் ஒரு சில பக்தர்கள் செல்போனை கொண்டு வருகின்றனர். இதையடுத்து ஊழியர்கள் செல்போன்களை பறிமுதல் செய்து அபராதம் விதிப்பதோடு முறையான ரசீதும் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.