பெண்ணிடம் வழிப்பறி : குளத்தில் குதித்த திருடர்களை மடக்கிப்பிடித்த மக்கள்
பழனியில் நடந்து சென்ற பெண்ணிடம் வழிப்பறி செய்துவிட்டு குளத்தில் குதித்த திருடர்களை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையத்தில் இருந்து ஆவினன்குடி கோவிலுக்கு செல்லும் வையாபுரி குளம் சாலையில் பெண் ஒருவர் சென்றுகொண்டிருந்தார். அப்போது இரண்டு மர்மநபர்கள், பெண்ணின் கையில் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு ஓடினர். அப்பெண் கூச்சலிட்டதை கேட்டு அவ்வழியே வந்த பொதுமக்கள் இருவரையும் விரட்டினர். பொதுமக்கள் கையில் சிக்காமல் தப்பிக்கும் எண்ணத்துடன் திருடர்கள் இருவரும் வையாபுரி குளத்திற்குள் குதித்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் குளக்கரையை சுற்றி நின்றனர். குளத்தில் குதித்த திருடர்கள் இருவரும் சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேலாக நீரில் அங்குமிங்கும் அலைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பழனி நகர போலீசார், குளத்தின் மறுகரையில் உள்ள பாளையம் பகுதிக்குள் நுழைந்து திருடர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து வேறு வழியில்லாமல் பாளையம் பகுதியில் கரையேறிய திருடர்களை பொதுமக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்தனர்.
பின்னர் அங்குவந்த போலீசார் இருவரையும் மீட்டு, விசாரணை செய்ததில் ஒருவர் பெயர் சுரேஷ், இன்னொருவர் பெயர் பிரகாஷ் என்பதும், இருவரும் பழனி அடிவாரம் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் காவல்நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.