பாலம் உடைய போவதாக கிளம்பிய புரளி : ஆற்றுக்குள் இறங்கி சென்ற மக்கள்
பழனி சண்முகநதி ஆற்றுப் பாலம் உடையப்போவதாக கிளம்பிய புரளியால் மக்கள் ஆற்றுக்குள் இறங்கி சென்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி மற்றும் கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது சண்முகநதி. புனித நதியாக கருதப்படும் இந்த நதியை கடக்க கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு பாலம் ஒன்று அமைக்கப்பட்டது. இந்த பாலத்தை சீரமைக்கும் பணி 5 கோடி ரூபாய் மதிப்பில் தற்போது நடைபெற்றுவருகிறது. பாலத்தின் தூண்களில் இருந்து நான்கு இன்ச் உயரத்துக்கு பாலம் தூக்கப்பட்டு பேரிங்குகள் வைக்கும்பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பாலம் உயர்த்தும் பணியின்போது பாலத்தில் சிறிய அளவிலான விரிசல்கள் ஏற்பட்டுள்ளது. இது வழக்கமான ஒன்று தான் எனக்கூறப்படுகிறது.
இதனைக்கண்ட சிலர் பாலம் சேதமடைந்து விட்டதாகவும், பாலம் விழப்போவதாக புரளி கிளப்பினர். இதனால் கனரக வாகனங்கள் பாலத்தில் செல்லாமல் இருபுறமும் நின்றன. அத்துடன் பல வாகனங்கள் மானூர், பெத்தநாயக்கன்பட்டி வழியாக மாற்றுவழியில் உடுமலை சாலைக்கு சென்றன. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் கட்டிட பணியாளர்களிடம் பேசிய போது, விரிசல்களால் வாகன செல்வதற்கு எந்த தடையுமில்லை என தெரிவித்தனர். பின்னர் வாகனபோக்காவரத்து மீண்டும் துவங்கியது. புரளி காரணமாக பலரும் ஆற்றின் கீழே இறங்கி தண்ணீரில், இருசக்கர வாகனங்களை ஓட்டி சாலைகளை கடந்து சென்றனர்.