நாட்டு மாடுகளை பாதுகாப்போம்; துன்புறுத்தமாட்டோம்: உறுதிமொழி ஏற்ற மாடுபிடி வீரர்கள்
பாலமேட்டில் ஜல்லிக்கட்டு தொடங்குவதற்கு முன்பு மதுரை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதி மொழி ஏற்றனர்.
தடைநீங்கியதால் 2 ஆண்டுகளுக்குப் பின்னர் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கியது. போட்டி தொடங்குவதற்கு முன்பாக மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள், நாட்டு மாட்டினங்களைப் பாதுகாப்போம், ஜல்லிக்கட்டு போட்டியின்போது மாடுகளைத் துன்புறுத்த மாட்டோம் என்று ஒரே குரலில் கூறி உறுதி மொழி ஏற்றனர். இதையடுத்து பாலமேடு விழா கமிட்டி சார்பாக 7 கோயில் காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. கோயில் காளைகளை யாரும் பிடிக்கக் கூடாது என்பது மரபு. அதன்பின்னர் போட்டியில் பங்கேற்க வந்துள்ள காளைகள் சீரான இடைவெளியில் அவிழ்த்து விடப்பட உள்ளன. ஜல்லிக்கட்டைத் தொடங்கி வைத்த மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், அரசின் விதிமுறைக்குட்பட்டு காளைகளை பிடிக்கும் சிறந்த மாடுபிடி வீரருக்கு அரசு சார்பில் நற்சான்று வழங்கப்படும் என்று அறிவித்தார். மேலும், ஜல்லிக்கட்டு கமிட்டி சார்பில் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்களுக்கு இருசக்கர வாகனங்கள், தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட உள்ளன. காலை 9 மணிக்குத் தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டி மாலை 5 மணி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது.