பத்மஸ்ரீ விருது பெற்ற கோவை நானம்மாள் காலமானார்..!
பத்மஸ்ரீ விருது பெற்ற கோவையை சேர்ந்த நானம்மாள் காலமானார். அவருக்கு வயது 99.
கோயம்புத்தூரின் கணபதி பகுதியில் வசிந்து வந்த நானம்மாள், பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள ஜமீன் காளியாபுரத்தில் 1920-ஆம் ஆண்டில் வேளாண்மைக் குடும்பத்தில் பிறந்தவர். தனது தாத்தா மன்னார்சாமியிடமிருந்து யோகாசனப் பயிற்சியைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்த நானம்மாள், இறக்கும் வரை கடினமான யோகாவையும் சர்வசாதாரணமாக செய்து வந்தவர். மிகவும் வயதான யோகா ஆசிரியையாகவும் வலம் வந்தார்.
இவரிடம் யோகா கற்றுக்கொண்ட 600 பேர் இன்று உலகம் முழுவதும் யோகா ஆசிரியர்களாக உள்ளனர். இதில் 36 பேர் நானம்மாளின் குடும்பத்தினரே ஆவர். இவரது யோகா மாணவர்கள் சீனா, ஆஸ்திரேலியா, லண்டன், சிங்கப்பூர், மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் நடைபெற்ற யோகா போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றுள்ளனர்.
இத்தகைய சிறப்புக்குரிய நானம்மாளுக்கு தான் மத்திய அரசு கடந்த 2018-ஆம் ஆண்டிற்கான பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. இவர் ஏற்கனவே குடியரசுத் தலைவரிடம் பெண் சக்தி விருதை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.