சென்னையில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கதிராமங்கலம், நெடுவாசல் போராட்டத்திற்கு ஆதரவாக திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறுது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது
சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இன்று காலை கல்லூரி முன்பு பூந்தமல்லி நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். கதிராமங்கலம்- நெடுவாசல் விவசாயிகளுக்காக போராடுவது குற்றமா? என்று கேள்வி எழுப்பினர். இடைநீக்கம் செய்யப்பட்ட 35 மாணவர்களை மீண்டும் கல்லூரியில் சேர்க்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
மறியலில் ஈடுபட்ட மாணவர்கள் முழக்கங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து கீழ்ப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவர்களை கலைந்து செல்லும்படி கேட்டனர். அப்போது போலீசார் கைது செய்ய முயற்சித்த போது மாணவர்களுக்கும் அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போலீசார் தடியடி நடத்தினர். அப்போது மாணவர்கள் சாலையில் நின்றிருந்த கார், போலீஸ் வேன் கண்ணாடிகளை உடைத்தனர்.
இதையடுத்து 13 கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்து கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். இந்த போராட்டம் காரணமாக அரை மணி நேரத்திற்கும் மேலாக பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கல்லூரி முன்பு போலீஸ் குவிக்கப்பட்டனர்.