"பாஜக ஆட்சியினால் செம்மொழி தமிழுக்கு ஆபத்து வந்துள்ளது" - ப.சிதம்பரம்
பாஜக ஆட்சியினால் செம்மொழி தமிழுக்கு ஆபத்து வந்துள்ளது என காரைக்குடியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசியிருக்கிறார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் ஊழியர் கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், ‘’வேளாண் சட்டத்தில் பாஜக அரசு வறட்டு பிடிவாதம் பிடித்து வருகிறது. அதேபோல் தமிழகத்தில் முதல்வர், துணை முதல்வருக்குள் இருந்துவரும் கருத்து வேறுபாட்டை மறைக்கவே, புதிய திட்டங்கள் என்ற பெயரில் அடிக்கல் நாட்டு விழா நடத்தப்படுகிறது.
தேசியமும் திராவிடமும் வளர்த்த மண் தமிழகம்; இதில் பாஜக என்ற நச்சு செடி வளராது மலராது. காங்கிரஸ் வெற்றியை துரோகிகள் மூலம் திருடிக் கொண்டவர்கள் பாஜக. நாடாளுமன்றத் தேர்தல் முடிவு அதிர்ச்சியை அளித்தது. பாஜகவின் இந்தி திணிப்பு நடவடிக்கையால் செம்மொழி தமிழுக்கு ஆபத்து வந்துள்ளது. நமது தாய்மொழி மெல்ல மெல்ல அழிந்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் ஒருபோதும் பாஜகவுடன் சமரசம் செய்து கொண்டது கிடையாது; சமரசத்திற்கு இடமும் இல்லை.
ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே கட்சி இதுதான் பாஜகவின் நோக்கம். அதேசமயம் அதிமுகவை குறைத்து மதிப்பிடவில்லை. அக்கட்சிக்கு தற்போது பண பலத்துடன் அதிகார பலமும் சேர்ந்துள்ளதுள்ளது. மகளிர் குழுக்களுக்கு கொடுக்கப்பட்ட கடனில், ஊழல் நடந்திருக்க வாய்ப்புள்ளதாக சந்தேகம் எழும்பியிருக்கிறது. எனவே மகளிர் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட வேண்டும்’’ என்று தனது குற்றச்சாட்டுகளையும், கோரிக்கைகளையும் விடுத்தார் ப.சிதம்பரம்.