இந்திய அரசை உலகம் நம்ப வேண்டுமே..?: ப.சிதம்பரம்
இந்திய அரசை உலகம் நம்ப வேண்டுமே? அதற்கான முயற்சியை அரசு எடுக்க வேண்டும் என்று சிலர் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 14-ஆம் தேதி, நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ்- இ- முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தானுக்குள் நுழைந்த இந்திய விமானப்படை பாலகோட் பகுதியில் தாக்குதல் நடத்தி ஜெய்ஷ்- இ- முகமது தீவிரவாத அமைப்பின் முகாம்களை அழித்தது. ஆனால் இதில் உயிரிழந்தவர்கள் விவரம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. மாறுபட்ட கருத்துகள் நிலவி வருகின்றன.
இதனிடையே, “ இந்திய விமானப் படையினரின் தாக்குதலில் எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்பதை அறிந்து கொள்ள இந்தியர்களான நமக்கு உரிமை இருக்கிறது. அத்துடன் உயிரிழந்தவர்கள் யார் யார்..? என்ற விவரமும் தெரியப்படுத்தப்பட வேண்டும். உண்மையான சம்பவம் என்னவென்று தெரிய வேண்டும்” என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார். இதுதவிர பலரும் உயிரிழந்தவர்களின் விவரங்களை அரசு தெரியப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதுகுறித்து பேசிய பிரதமர் மோடி, பாகிஸ்தான் மீது விமானப்படையினர் நடத்திய தாக்குதல் குறித்து ஆதாரங்களை எதிர்க்கட்சிகள் கேட்பது, பாகிஸ்தானை மட்டுமே மகிழ்ச்சிப்படுத்தும் எனத் தெரிவித்தார். தேசம் முழுமையும் ஒரே குரலில் பேசும்போது, 21 எதிர்க்கட்சிகள் டெல்லியில் கூடி தன்னை விமர்சித்தார்கள் என்றும், தமக்கு எதிராக மிகப்பெரிய சதி செய்வதாகவும் குற்றம்சாட்டினார்.
இந்நிலையில் இந்திய அரசை உலகம் நம்ப வேண்டுமே? அதற்கான முயற்சியை அரசு எடுக்க வேண்டும் என்று சிலர் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “ இந்திய விமானப் படையின் வீர நடவடிக்கையைப் பாராட்டிய முதல் மனிதர் ராகுல்காந்தி என்பதை பிரதமர் மோடி மறந்து விட்டார். விமானப் படையின் துணைத் தளபதி உயிரிழந்தோர் எண்ணிக்கை பற்றி கருத்துக் கூற மறுத்து விட்டார். அப்படியென்றால் 300/350 பேர் உயிரிழந்தார்கள் என்ற செய்தியை யார் பரப்பியது?. இந்திய குடிமகன் என்ற முறையில் என்னுடைய அரசை நான் நம்புகிறேன். ஆனால் உலகம். நம்ப வேண்டுமே? அதற்கான முயற்சியை அரசு எடுக்க வேண்டும் என்று சிலர் சொன்னதில் என்ன தவறு?” என தெரிவித்துள்ளார்.